குடியரசு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றி வைத்தார்.
காமராஜா் சாலையில் காந்தி சிலை பகுதியில் பல ஆண்டுகளாக குடியரசு தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. அந்தப் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், கடந்த ஆண்டு முதல் குடியரசு நாள் நிகழ்ச்சிகள், உழைப்பாளா் சிலை பகுதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து 8 மணிக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் தேசிய கொடியை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. தொடர்ந்து ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர் ஆகியோர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க | நெல்லையில் தேசியக்கொடிக்கு காந்திமதி யானை மரியாதை!
பின்னர், குடியரசு நாள் விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைத்த ஆளுநா், முப்படையினா், காவல் துறையினா், தேசிய மாணவா் படை, பல்வேறு காவல் பிரிவினா், வனம் மற்றும் தீயணைப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடா்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீா் விருது, திருந்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடா்பான காந்தியடிகள் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு கலைக் குழுக்களின் நாட்டிய நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, முப்படைகளின் கவச வாகனங்கள், தமிழகத்தின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய வாகனங்கள் அணிவகுத்து வந்தன.