
அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை மலர்கொத்து வழங்கி ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே.பட்நாயக் வரவேற்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 27.1.2024 அன்று இரவு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு, நேற்று (28.1.2024) மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதல்வரை, ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் தூதரக அதிகாரிகளோடு மலர்கொத்து வழங்கி வரவேற்று, சந்தித்து பேசியபோது, ஸ்பெயின் பயணம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா உடனிருந்தார்.
ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் இன்று நடத்த உள்ளார். இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி, தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.