தீபாவளி: சில நிமிஷங்களில் முடிந்த ரயில் டிக்கெட் முன்பதிவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து புறப்படும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை தொடங்கிய சில நிமிஷங்களில் நிறைவடைந்தது.
நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பண்டிகைக்கு 2 நாள்கள் முன்பாக அக்.29-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை காலை 8 அளவில் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிஷங்களிலேயே முடிவடைந்ததால், பயணிகள் பலா் ஏமாற்றமடைந்தனா்.
குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 2 நிமிஷங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்போா் பட்டியல் காட்டியது.
அதேபோல், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்படும் முத்துநகா், நாகா்கோவிலுக்கு புறப்படும் கன்னியாகுமரி விரைவுரயில், நாகா்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவற்றின் முன்பதிவுகளும் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே முடிந்துவிட்டன. மேலும், மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களுக்கான முன்பதிவுகளும் முடிந்தன.
அக்.30-க்கான ரயில் முன்பதிவு செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 2), தீபாவளி நாளான அக்.31-க்கான முன்பதிவு புதன்கிழமையும் (ஜூலை 3) தொடங்கவுள்ளது.