தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்? சீமான் கேள்வி

தொல்லியல்துறை பணிக்கு ‘சமஸ்கிருதம்’ தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் (கோப்புப்படம்)
சீமான் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தொல்லியல்துறை பணிக்கு ‘சமஸ்கிருதம்’ தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் ‘சமஸ்கிருதம்’ தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமா அல்லது சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகைய அறிவிக்கை யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது? தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் ஒப்புதலின் பேரில்தான் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா? அப்படியென்றால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதுபோல் உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியா? திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா? அல்லது மனுநீதியா?

சீமான் (கோப்புப்படம்)
ஜம்மு-காஷ்மீர்: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

அதுமட்டுமின்றி தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா? தமிழ்மொழி என்று குறிப்பிடுவதில் தமிழ்நாடு அரசிற்கு என்ன தயக்கம்? என்ன தடை? திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை திராவிட மாடல் அரசின் முதல்வர் முதலில் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக 6 முறை ஆட்சிக்கு வந்து, 54 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தமிழ்நாட்டின் ‘தமிழ்த்தெருக்களில் தமிழ் இல்லையென்று யாரும் கூறக்கூடாது’ என்று ஒரு வெற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ்த்தெருக்களில் தமிழ் வரவே இத்தனை ஆண்டுகாலம் ஆகியுள்ளது, அதுவும் இன்னும் முழுமையாக நிறைவேறியபாடில்லை. அதற்குள் தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து அன்னைத்தமிழை அகற்ற திமுக அரசு முனைவது பெருங்கொடுமையாகும். இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? 'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!', ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!' என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிறுவப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமென்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com