
கூட்டணி நலனுக்காகத் தமிழக விவசாயிகளைப் புறக்கணிக்காமல், காவிரியில் தமிழகத்திற்கான பங்கைப் பெற்றுத் தர தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இன்று தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “காவிரி நீரில், கடந்தாண்டு கிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு 81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டிய தமிழகம், அதில் பாதி அளவைக் கூட பெறவில்லை என்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.
திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் தமிழக முதலமைச்சர்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “காவிரியில் குறித்த அளவு நீர்வரத்து இல்லாததால், இந்த ஆண்டு ஜூன் 12 அன்று, விவசாயத்திற்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல், பாசனத்துக்கு நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இது குறித்த எந்தக் கவலையும் இல்லை. தன்னை ஒரு டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு, வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்?” என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கமாக கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகு உபரிநீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடுவது வழக்கத்தில் உள்ளது.
கர்நாடக அணைகளுக்கு ஆகஸ்ட் 15-க்கு பிறகே நீர்வரத்து அதிகமாக இருக்குமென்றும், அதில் செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அந்த மாத இறுதியில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாகவும், ஒருவேளை முன்னதாக நீர் திறக்கப்பட்டாலும் அது குடிநீருக்கு பயன்படுத்தும் அளவிலேயே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.