நாடு தான் என் குடும்பம், இந்த நாட்டு மக்கள்தான் என் குடும்பம் என பஜக பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களில் சொந்த குடும்பத்துக்கே முன்னுரிமை அளிப்பதாகவும், தேசத்துக்கே முன்னுரிமை என்று கூறியதால் என்மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,
மத்திய அரசின் திட்டத்தால் கொள்ளையடிக்க முடியாமல் திமுக குடும்பம் திணறி வருகிறது. திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் மக்களுக்கே சென்று சேரும் என்பதே எனது வாக்குறுதி.
நாட்டு மக்களின் நலனை நினைத்து அரசியல் செய்கிறேன். 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் சூரிய மின்சக்தி திட்டத்துக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருகோடி குடும்பங்களுக்கு இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படவுள்ளது. உபரி மின்சாரத்தை அரசே கொள்முதல் செய்யும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்று சேரும்.
2024 தொடங்கிய சில நாள்களிலேயே எரிசக்தி திறையில் பெரும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் அனல் மின் நிலையங்கள், சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நாடுதான் என் குடும்பம்
மோடிக்கு குடும்பம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. நாம் அனைவரும் சேர்ந்துதான் மோடியின் குடும்பம். இந்த நாடு தான் என் குடும்பம், இந்த நாட்டு மக்கள்தான் என் குடும்பம்.
யார் ஆதரவின்றி இருக்கிறனரோ, அவர் என் குடும்பம். தற்போது தேசமே கூறுகிறது நான் மோடியின் குடும்பத்தைச்சேர்ந்தவன் என்று.
தேசத்தின் நலனுக்காகவே நான் இளம் வயதிலேயே குடும்பத்திலிருந்து விலகினேன். தேசத்துக்கே முன்னுரிமை என்று கூறியதால் என்மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன.