தெற்கு மண்டல ரயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ள மதுரை - பெங்களூரு இடையே வழித்தடம் உள்பட 7 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரத்தில் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை - பெங்களூரு, கோவை - பெங்களூரு, கோவை - சென்னை, சென்னை - விஜயவாடா, சென்னை - திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகின்றன.
இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கை தொடர்ந்து, மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இந்த சேவையை அடுத்த வாரம் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று பெங்களூரு செல்லும் வகையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயில் ஆரஞ்ச் நிறத்தில் இயக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.