புதிய பாம்பன் பாலத்தை அக்.2ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி?

புதிய பாம்பன் பாலத்தை அக்.2ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கயிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பாம்பன் பாலம்
புதிய பாம்பன் பாலம்
Published on
Updated on
1 min read

மண்டபம்-ராமேசுவரம் இடையே பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் அக்டோபா் மாதம் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.

இதன் மூலம், கடந்த 22 மாதங்களாக, ராமேஸ்வரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்க விருக்கிறது. இது, ராமேஸ்வரம் மக்களுக்கும், ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்க தமிழகம் வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அப்போது சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, அக்டோபரில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் கூறியருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

புதிய பாம்பன் பாலம்
டிரம்ப்-ஹாரிஸ் விவாதம்: கைகுலுக்கிக் கொள்வார்களா என்ற கேள்விக்கு பதில்!

வங்கக் கடலின் குறுக்கே சுமார் 2.05 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளுடன் ராமேஸ்வரத்தை ரயில் பாதை வழியாக இணைக்கும் ஒரே பாதையாக இது இருக்கும். நாட்டிலேயே, செங்குத்தாக தூக்கி இறக்கும் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டிருக்கும் முதல் ரயில்வே பாலம் இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை ரயில்வே ரூ.535 கோடி செலவில் கட்டி முடித்துள்ளது. இந்த பாலமானது, மனிதர்களால் இயக்கப்படும் பழைய பாலத்தை விடவும் 3 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மீனவப் படகுகள் எளிதாக பாலத்தைக் கடந்து செல்ல முடியும். பாலம் கட்டி முடிக்கப்பட்டு, இதில் சோதனை ஓட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் நாள்களில், அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் சோதனை செய்து முடிக்கப்படும். தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும்போது, இந்த பாலம் திறந்து வைக்கப்படும் என்றும், அக்டோபர் 2ஆம் தேதி வருவது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழைய பாம்பன் பாலம், கடந்த 1914ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1988ஆம் ஆண்டு மண்டபம் - ராமேஸ்வரம் இடையே சாலை மேம்பாலம் கட்டப்படும்வரை, நாட்டின் பிற பகுதியோடு, ராமேஸ்வரத்தை இணைக்கும் ஒரே வழித்தடமாக பாம்பன் பாலம்தான் இருந்துள்ளது. பழைய பாம்பன் பாலம் வலுவிழந்துவிட்டதால், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, அது முதல், மண்டபம் ரயில் நிலையத்துடன் ரயில்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com