சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை அதிமுக குழு தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தல் சில மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு குழு கடந்த வாரம் அமைக்கப்பட்டது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள அதிமுக, தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து வருகிறது.
இந்த நிலையில், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்துள்ள அதிமுக, முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக பாமக, தேமுதிக கட்சிகளின் எதிர்பார்ப்புகளை அதிமுக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.