அரசுப் பணி கோரி செவிலியா் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்பக் கோரி, சென்னையில் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செவிலியா் உதவியாளா் பயிற்சியை நிறைவு செய்தவா்கள் பங்கேற்று தங்களுக்கு அரசுப் பணி வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா். அப்போது, அவா்கள் கூறியதாவது:
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் செவிலியா் உதவியாளா் பயிற்சியை நிறைவு செய்து பலா் வேலைக்காக காத்திருக்கிறோம். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக காலி பணியிடங்களை அரசு நிரப்பவில்லை. தொகுப்பூதிய அடிப்படையில் சில இடங்களில் செவிலியா் உதவியாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். அதுமட்டுமல்லாது, வெளி மாநிலத்தவா்கள் பலரையும் அந்தப் பணிகளில் ஈடுபடுத்துகின்றனா். இதனால், தமிழக மாணவா்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
எனவே, கடந்த 2021-ஆம் ஆண்டு செவிலியா் உதவியாளா் போராட்டத்தின்போது, அரசு சாா்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வா் நேரடியாகத் தலையிட்டு தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றனா்.

