
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வித்திடப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பொதுப் பணித் துறை ஏரிகள், ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டமாகும்.
இந்தத் திட்டத்திற்கு, திமுக அங்கம் வகித்த அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்கான குரல் 1957 ஆம் ஆண்டு முதல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தாலும், இந்தத் திட்டத்திற்கு விதை போட்ட பெருமை ஜெயலலிதாவையேச் சாரும். மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் அத்திக்கடவு- அவிநாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தவர் அவர்.
மேலும், 07-08-2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தபோது, தமிழ்நாடு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிக்கையினை பிரதமரிடம் வழங்கினார். இந்த அறிக்கையில், 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு -அவிநாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம்பெற்றிருந்தது.
இதையும் படிக்க | மீண்டும் தர்மமே வெல்லும்: ஓபிஎஸ் பேட்டி
இதனைத் தொடர்ந்து, 16-02-2016 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2016-2017ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், அத்திக்கடவு - அவிநாசித் திட்டம் இடம்பெற்றிருந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி, மத்திய அரசிற்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும் என்றும், அதே சமயத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றை, நிதி அமைச்சர் என்ற முறையில் பேரவையில் வாசிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்தார்,
இதனைத் தொடர்ந்து, 18-02-2016 நாளிட்ட பொதுப் பணித் துறை அரசாணை எண் 66 மூலம் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூன்று கோடியே 27 லட்சம் ரூபாய் நிதியை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலையொட்டி சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அத்திக்கடவு - அவிநாசித் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.
அவரின் ஆளுமை, பன்மொழித் திறன் காரணமாக மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் பாதையில் நடைபெற்ற ஆட்சி, அவரின் கனவுத் திட்டமான அத்திக்கடவு -அவிநாசித் திட்டத்தை நிறைவேற்றியது. 2017 முதல் 2021 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சி என்பது ஜெயலலிதாவின் ஆட்சி. அவரின் கனவு நனவாக்கப்பட்டது அவ்வளவுதான்.
இன்றைக்கு, அத்திக்கடவு - அவிநாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் வைக்கப்படவில்லை என்பதால்தான் பங்கேற்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.