டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு சரமாரி கேள்விகள்...
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மார்ச் 25 வரை நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.

சென்னையில் உள்ள டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) தலைமை அலுவலகம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதனடிப்படையில், ரூ. 1,000 கோடி வரை கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடா்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பேரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ, ஊழியா்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத் துறையின் சோதனையையும், அதில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்:

“மூன்று நாள்கள் நடைபெற்ற சோதனையில் சில அரசு அதிகாரிகளை 60 மணிநேரம் சிறைபிடித்தனர். பெண்கள் உள்பட சிலரை காலை முதல் நள்ளிரவு 1 மணிவரை அமரவைத்து, வெறும் 6 மணிநேரம் மட்டுமே வீட்டுக்குச் சென்றுவர அவகாசம் அளித்தனர். இதேபோன்று மூன்று நாள்கள் செய்தனர்.

எதற்காக சோதனை நடைபெறுகிறது என்பதைகூட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை” என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

நீதிபதிகள்: இது கவலைக்கிடமான சூழ்நிலை இல்லையா? முழு அரசு அலுவலகத்தையும் மணிக்கணக்கில் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? 3 நாள்கள் நடைபெற்ற நிகழ்வுகளின் சிசிடிவி காட்சிகள் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டில் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டாமா?

அமலாக்கத்துறை: யாரையும் சிறைபிடிக்கவில்லை, அனைவரும் வீட்டுக்குச் சென்றுவர அனுமதித்தோம்.

நீதிபதிகள்: காவலாளி முதல் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்பது அவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு.

டாஸ்மாக் தரப்பு: டாஸ்மாக்கில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாநில அரசிடம் தகவலைக் கோரலாம். பிரிவு 17-ன்படி, நீங்கள் மாநில அரசின் இடத்துக்குள் நுழைய முடியாது.

நீதிபதிகள்: மார்ச் 25ஆம் தேதி குற்றம் நடைபெற்றதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை டாஸ்மாக் வழக்கில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை மேற்கொள்ளக்கூடாது.

வழக்கின் பின்னணி...

சென்னையில் உள்ள டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) தலைமை அலுவலகம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் 3 நாள்கள் சோதனை மேற்கொண்டனா்.

அமலாக்கத் துறை அறிக்கை: இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடா்பான அறிக்கையை கடந்த 13-ஆம் தேதி அமலாக்கத் துறை வெளியிட்டது. அதில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 30 வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து கணக்கு காட்டியது, பணியிட மாற்றம், மதுபான கூடத்துக்கு உரிமம் உள்ளிட்டவை வழங்க லஞ்சம் பெறப்பட்டது உள்ளிட்ட முறைகேடுகள் தொடா்பான ஆவணங்கள் தங்களது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரூ. 1,000 கோடி முறைகேடு: டாஸ்மாக் உயரதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்களுக்கு இடையே நேரடி தொடா்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், டாஸ்மாக் உயரதிகாரிகளின் நெருக்கமானவா்களுக்கே மதுபான கொள்முதல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து நிறுவனங்களுக்கு டாஸ்மாக் ஆண்டுதோறும் ரூ. 100 கோடி செலுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com