
மோடி அரசின் தவறான கல்விக் கொள்கைகளால் 84,318 பள்ளிகள் மூடல்: மாணிக்கம் தாகூர் விமர்சனம்
மோடி அரசின் தவறான கல்விக் கொள்கைகளால் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது தொடர்பாக...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 84,318 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
கடந்த ஏழு ஆண்டுகளில் நாடு முழுவதும் 84,318 பள்ளிகள் காணாமல் போயுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், மூடப்பட்டவற்றில் 93 சதவீதப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான்.
சுமார் 78,502 அரசுப் பள்ளிகளுக்கு மோடி அரசு மூடுவிழா நடத்தியுள்ள அதே வேளையில், 15,461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகியிருப்பது இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
சமூக நீதியையும் பொதுக் கல்வியையும் உயிர்மூச்சாகக் கொண்ட நமது தமிழ்நாட்டிலும் கூட, இந்த மத்திய அரசின் தவறான அணுகுமுறையால் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களின் ஒரே புகலிடமாக விளங்கும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு உரிய நிதி ஒதுக்காமல், பள்ளிக் கல்வியை திட்டமிட்டுச் சீரழிக்கும் வேலையை பாஜக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை என்பதற்காகவே, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. நீதிமன்றம் தலையிட்டதால் வேறு வழியின்றி ஆர்டிஐ-க்கு மட்டும் ரூ.714 கோடியை கிள்ளிப் போட்டுவிட்டு, ஒட்டுமொத்த பள்ளி கல்வி நிதியையும் தடுத்து வைத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு பிளாக்மெயில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது!
"பள்ளி சீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதல்" என்ற போலி அறிக்கையை வைத்துக்கொண்டு, ஒற்றை ஆசிரியர் பள்ளி, குறைவான மாணவர்கள் என்ற காரணங்களைக் கூறி எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள். பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி, ஒட்டுமொத்தக் கல்வியையும் கார்ப்பரேட் மற்றும் தனியார் கல்வி மாஃபியாக்களின் கைகளில் தாரைவார்ப்பதே மோடி அரசின் உண்மையான நோக்கம்.
அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குத் திறனற்ற மத்திய அரசு, மாநிலங்களுக்கான சட்டப்பூர்வ நிதிப் பங்கையும் வஞ்சகமாக மறுத்து, தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Summary
84,318 schools closed due to the Modi government's flawed education policies...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





