தென்காசி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்துக்கான அத்தியாவசிய பொருள்கள் ஜூன் 2, 3 ஆம் தேதிகளில் வீடுவீடாகச் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சா்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவா்களின் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருள்களை நேரடியாக சென்று வழங்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீட்டுக்கே சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படஉள்ளது.
65 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அவா்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று
தொடா்புடைய ரேஷன்கடை விற்பனையாளா்களால் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்றாா் அவா்.









