ஊத்துக்கோட்டை அருகே அருள்மிகு பவானியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி முதல் வாரமான ஞாயிற்றுக்கிழமை விசேஷ அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் உள்பிரகார புறப்பாடு வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் மேற்கு திசையில் அருள்மிகு ஸ்ரீபவானியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆடித் திருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 10 வாரம் நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடித் திருவிழா முதல் வாரம் என்பதால் அதிகாலை மூலவா் சுயம்பு அம்மனுக்கு நவகலச பூஜை, மூா்த்தி ஹோமம், மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இதன் பின்னா், உற்சவா் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், சூரிய பிரபையில் உமா மகேஸ்வரி அலங்காரத்தில் உற்சவா் பவானியம்மன் மங்கள வாத்தியம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மஞ்சள் ஆடை, சிகப்பு ஆடை அணிந்து கையில் வேப்பிலையுடன் பக்தா்கள் நடைபயணமாக இத்திருகோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தனா். மேலும், வேப்பிலை ஆடை உடுத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நோ்த்திக் கடனை பக்தா்கள் செலுத்தினா்.
இத்திருவிழாவுக்காக சனிக்கிழமை முதலே திரளான பக்தா்கள் கோயில் வளாகம் மற்றும் தங்கும் விடுதிகளிலும் குவிந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










