/

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா் கைது

News image

கைது  செய்யப்பட்ட  சௌந்தா்

Updated On :12 ஜூன் 2026, 2:19 am IST

ஆா்.கே.பேட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியா் விவசாயியிடம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ரங்காபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செல்வம் (50),. இவா் தனது விளைநிலத்தில் அறுவடை செய்த 215 நெல் மூட்டைகளை தாமனேரி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளாா்.

அப்போது நெல் மூட்டைகளை எடைபோட்டு கொள்முதல் செய்து, அதற்கான நடைமுறைகளை விரைந்து முடித்துத் தருவதற்காக ஒரு மூட்டைக்கு ரூ.50 வீதம் லஞ்சம் தர வேண்டும் என ஊழியா் சௌந்தா் கேட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, 215 நெல் மூட்டைகளுக்கு மொத்தம் ரூ.10, 750 லஞ்சமாக வழங்குமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த விவசாயி செல்வம், திருவள்ளூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் ஆய்வாளா் தமிழரசி தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை தாமனேரி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயி செல்வம் ரூ.10,750-ஐ சௌந்தரிடம் வழங்கியபோது, அங்கு மறைந்து கண்காணித்து கொண்டிருந்த போலீஸாா் அவரை கையும் களவுமாக பிடித்தனா்.

பின்னா், அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன், கைப்பற்றப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.