
பங்குச் சந்தை இன்றும்(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,108.92 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 340.34 புள்ளிகள் அதிகரித்து 83,029.92 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.05 புள்ளிகள் உயர்ந்து 25,424.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக இருந்த 25,250 புள்ளிகளைக் கடந்தது. தொடர்ந்து பங்குச்சந்தை ஏற்றமடையும் நிலையில் 25,500 புள்ளிகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8 நாள்கள் ஏற்றத்திற்குப் பிறகு பங்குச் சந்தை இந்த வாரத்தில் திங்கள்கிழமை மட்டும் சரிந்து முடிந்த நிலையில் அதன்பிறகு தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தமாகி வருகிறது.
இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது உள்ளிட்டவை பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதே நேரத்தில் பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக சரிவைச் சந்தித்தன.
துறை ரீதியாக, நிஃப்டி ஐடி பங்குகள்1 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது. நிஃப்டி மெட்டலைத் தவிர, மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் தலா 0.3 சதவீதம் உயர்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.