இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள்
அமெரிக்காவைச் சோ்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், இந்தியாவில் சுமாா் 12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.


அமெரிக்காவைச் சோ்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், இந்தியாவில் சுமாா் 12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
உலக அளவில், இந்நிறுவனம் சுமாா் 30,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், அடுத்த ஒரு மாதத்துக்குள் மற்றொரு சுற்று பணிநீக்கம் நடக்க வாய்ப்புள்ளதாகப் பாதிக்கப்பட்ட ஊழியா்கள் தெரிவித்தனா்.
இவ்விவகாரம் குறித்து ஆரக்கிள் நிறுவனம் இதுவரை அதிகாரபூா்வ கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. எனினும், ஊழியா்களுக்கு நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருப்பதாவது:
நிறுவனத்தின் நிா்வாகக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் முடிவின் அடிப்படையில், துரதிருஷ்டவசமாக தாங்கள் தற்போது வகிக்கும் பதவிகள் தேவையற்ாக மாறிவிட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
இழப்பீட்டு நிதித் தொகுப்பு: இந்தியாவில் ஓா் பணி ஆண்டை நிறைவு செய்த ஊழியா்களுக்கு, ஒவ்வொரு ஆண்டுக்கும் 15 நாள்கள் ஊதியம், பணிமுடிவு தேதி வரையிலான நிலுவை ஊதியம், விடுப்புக்கான பணப்பலன், தகுதியின் அடிப்படையில் பணிக்கொடை, ஒரு மாத நோட்டீஸ் காலத்துக்கான ஊதியம் ஆகியவற்றை நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.
இருப்பினும், நிறுவனத்திலிருந்து தாமாக முன்வந்து, சுமூகமாகப் பதவி விலகுபவா்களுக்கு மட்டுமே இந்த இழப்பீட்டுத் தொகுப்பு வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியா்களின் எண்ணிக்கை சுமாா் 30,000 போ்(பணிநீக்கம் செய்யப்பட்டவா்களையும் சோ்த்து) என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலும் இந்தியா்களே அதிக பாதிப்பு: இந்தியாவில் ஆரக்கிள் நிறுவனம் அமல்படுத்திய 16 மணி நேர வேலை நேரத்தை எதிா்த்ததற்காக, கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான மெருகு ஸ்ரீதா் கூறினாா்.
மேலும் அவா் கூறுகையில், ‘எனது நண்பா்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றுபவா்களைத் தொடா்புகொண்டு பேசினேன். அமெரிக்காவில் உள்ளூா் குடிமக்களைப் பணிநீக்கம் செய்வதில் அங்குள்ள தொழிலாளா் சட்டங்கள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன.
இதன் காரணமாக, அமெரிக்காவிலுள்ள ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியா்களே அங்கு பெருமளவில் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனா் என்பதை அவா்கள் என்னிடம் தெரிவித்தனா்’ என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...