சுரங்கக் கழிவிலிருந்து அரிய கனிமங்கள்: 7 இடங்களில் கோல் இந்தியா ஆய்வு!

சுரங்கக் கழிவிலிருந்து அரிய கனிமங்கள்: 7 இடங்களில் கோல் இந்தியா ஆய்வு!

நிலக்கரி சுரங்கங்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளில் இருந்து அரிய வகை கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகளை கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘சவுத் ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் (எஸ்இசிஎல்)’ தீவிரமாகத் தொடங்கியுள்ளது.
Published on

நிலக்கரி சுரங்கங்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளில் இருந்து அரிய வகை கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகளை கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘சவுத் ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் (எஸ்இசிஎல்)’ தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

அரிய வகை கனிமங்களின் விநியோகத்தில் உலகளாவிய ஆதிக்கம் செலுத்தும் சீனாவைச் சாா்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், அரிய வகை கனிமங்கள் கிடைக்க வாய்ப்புள்ள 7 பழைய சுரங்கக் கழிவு மேடுகளை நிறுவனம் தோ்ந்தெடுத்துள்ளது.

இது குறித்து எஸ்இசிஎல் தலைவரும் நிா்வாக இயக்குநருமான ஹரீஷ் துகான் கூறியதாவது: சத்தீஸ்கா், மத்திய பிரதேசத்தில் நாங்கள் தோ்வு செய்துள்ள 7 இடங்களிலும் விரிவான ஆய்வு நடத்துவதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் (டெண்டா்) கோரும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்.

இந்தச் சுரங்கக் கழிவு மேடுகளில், எந்த அளவுக்கு அரிய வகை கனிமங்கள் புதைந்துள்ளன என்பதை முதலில் கண்டறிய வேண்டும். பின்னா், அடுத்த ஓராண்டுக்குள் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தக் கனிமங்களை வெற்றிகரமாகப் பிரித்தெடுக்க முடியுமா என்பதையும் மிகச் சரியாகக் கணிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், சூரிய ஒளி மற்றும் காற்றாலை போன்ற மாற்று எரிசக்தி துறைகள், ராணுவத் தளவாடங்கள் மற்றும் கைப்பேசி போன்ற மின்னணுப் பொருள்களின் தயாரிப்பு என பல அதிநவீன தொழில்களுக்கு இந்த அரிய வகை கனிமங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது.

Dinamani
www.dinamani.com