அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

68. குதிரைகள் ஆறு..

நீ என்னிடம் வந்து சேரும்போதே மூன்றாம் வகை குதிரையாக இருந்தாய். இப்போது இரண்டாம் வகைக்கு உயர்ந்திருக்கிறாய். சீக்கிரம் முதல் வகை குதிரை நிலையை அடைந்துவிடுவாய்.

News image
Updated On :24 செப்டம்பர் 2019, 6:25 pm IST

உடல், மனம், சிந்தனை, செயல்.. இவற்றைத் தொடர்புபடுத்தி அன்றைய பாடம் நடத்தினார் குரு. கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

புரிந்துகொள்வதற்கு கடினமான பாடமாக இருந்ததால், பாதியில் நிறுத்தி விட்டு, “பாடம் புரிகிறதா?” என சிஷ்யனிடம் கேட்டார் குரு.

“நன்றாகப் புரிகிறது குருவே. பாடத்தைத் தொடருங்கள்..” என்றான் சிஷ்யன்.

“நல்லது. நீ என்னிடம் வந்து சேரும்போதே மூன்றாம் வகை குதிரையாக இருந்தாய். இப்போது இரண்டாம் வகைக்கு உயர்ந்திருக்கிறாய். சீக்கிரம் முதல் வகை குதிரை நிலையை அடைந்துவிடுவாய். பாராட்டுக்கள்..” என்றார் குரு.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கேட்ட அதே கேள்வியைத்தான் சிஷ்யனும் கேட்டான் குருவிடம்.. “அதென்ன மூன்றாம் வகை குதிரை? எனக்கு விளக்க முடியுமா குருவே?” என்றான்.

குரு விளக்கம் கூறலானார்..

“குதிரைகளில் மொத்தம் ஆறு வகைகள் இருக்கின்றன. எதுவும் செய்யப்பிடிக்காமல் சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருப்பவை ஆறாம் வகை. அவை, தன்னை அறிவதில்லை. தன் திறனையும் உணர்வதில்லை. உயிருள்ள பிணம்போலத்தான். எத்தனை முறை அதட்டினாலும், அடித்தாலும் அது அப்படியேதான் இருக்கும். கடமைகளைச் செய்ய முரண்டு பிடிக்கும். பிறருக்கோ அல்லது தனக்கோ பயனில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களும் இப்படிப்பட்டவர்களே".

“ம்..”.

“ஐந்தாம் வகை குதிரைகள் கொஞ்சம்போல சுவாதீனம் கொண்டவை. குச்சியெடுத்து அதை அடித்தால் தன் உணர்வுக்கு வரும். திரும்பத் திரும்ப அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அடிக்கடி அறிவுறுத்திக்கொண்டே இருந்தால்தான் ஒரு சில மனிதர்கள் தங்கள் கடமைகளைச் செய்வார்கள். அவர்களும் இவ்வகை குதிரைகளும் ஒன்றுபோலத்தான்..”.

“ம்..”.

“நான்காம் வகை குதிரைகள் கொஞ்சம் மேலான ரகம். அடிக்கடி அடித்து, நினைவூட்டவேண்டியதில்லை. அவ்வப்போது அடித்தால் போதும். அதேபோல, அவ்வப்போது மற்றவர்களின் வழிகாட்டுதல் இருந்தால்தான் ஒருசில மனிதர்கள் விழிப்பு உணர்வை அடைவார்கள். அவர்களும் இவ்வகை குதிரைகளும் ஒரே ரகம்தான்..”.

“ம்..”.

“மூன்றாம் வகை குதிரைகளுக்கு அடி கொடுக்கவெல்லாம் தேவையில்லை. குச்சியை எடுத்து அதன் கண்களில் காட்டினாலே போதும். எழுந்து நடக்க ஆரம்பித்துவிடும். மனிதர்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். சரியான நேரம், சரியான பாடம் கிடைத்தால் போதும் அவர்களுக்கு. விழித்துக்கொண்டுவிடுவார்கள்..”.

‘ம்..”.

“குச்சி இருப்பதுபோல பாவனை செய்து காட்டினால் போதும் இரண்டாம் வகை குதிரைகளுக்கு. அல்லது குச்சி போன்ற நிழலைப் பார்த்துவிட்டாலும் அவை சட்டென விழித்துக்கொள்ளும். அப்படி சட்டென தன் உணர்வை அடையும் மனிதர்களை இவ்வகை குதிரைகளோடு ஒப்பிடலாம்..”.

“ம்..”.

“முதல் வகை குதிரைகளுக்கு குச்சியைக் காட்டத் தேவையில்லை. அடி கொடுக்கவும் தேவையில்லை. அவை எப்போதும் விழிப்பு நிலையில்தான் இருக்கும். அறிவுறுத்தலோ நினைவூட்டலோ தேவையில்லாமல் தன் கடமைகளைச் செய்துமுடிக்கும் மனிதர்கள் இப்படிப்பட்டவர்களே..” என்று கூறி முடித்தார் குருநாதர்.

குருநாதர் தன்னை படிப்படியாக நிலை உயரும் குதிரையாக எண்ணிப் பாராட்டியதை நினைத்து மகிழ்ந்தான் சிஷ்யன். இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு குதிரைபோல பாவித்து, உரத்துக் கனைத்துக் காட்டினான். புன்னகைத்தார் குரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.