குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்கள்... மகாத்மாவின் தனிச்செயலருக்கு நேர்ந்த அவலம்!
கடந்த மாதம் தினமணி.காமின் நோ காம்ப்ரமைஸ் நேர்காணலுக்காக மகாத்மாவின் தனிச்செயலராக 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட பெரியவர் வி கல்யாணம் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அவருடனான உரையாடலின் போது அவர் தற்போதைய தனது பிரச்னைகளில் ஒன்றைப் பற்றிக் கூறி இதையெல்லாம் உங்களது பத்திரிகையில் நீங்கள் வெளியிடுவீர்களா? என்று கேட்டிருந்தார். தவறு என்று தெரிந்தால் அதை நிச்சயமாக பொதுவெளியில் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை பத்திரிகைகளுக்கு உண்டு தானே?
அதனடிப்படையில் இந்தச் செய்தி தினமணி.காமில் வெளியிடப்படுகிறது. பெரியவரது குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தங்கள் மேலான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று நினைத்தால் தங்கள் தரப்பு நியாயத்தை எங்களுக்கு எழுதலாம். தற்போது பெரியவர் வி.கல்யாணம் அவர்களின் கூற்றுப்படி;
வி.கல்யாணம் தனக்கு நேர்ந்த அசெளகர்யம் குறித்து விளக்கும் காணொளி....
அவரது வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்கு குடி வந்த இரு பெண்கள்... அதை யாருடைய அனுமதியும் இன்றி அவர்களிஷ்டத்திற்கு மகளிர் தங்கும் விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். மாற்றியதோடு அல்லாமல் மெயிண்டனென்ஸாக எவ்விதத் தொகையும் கட்டாமல் அந்த அபார்ட்மெண்ட்டின் தண்ணீர் வசதிகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்துவதற்காக அவர்களுக்கு தண்ணீர் வசதியை நிறுத்திய நடவடிக்கைக்கு எதிர்வினையாக கல்யாணம் அவர்கள் வசிக்கும் வீட்டின் பூட்டை உடைப்பது, கதவை உடைத்து மோட்டார் இருக்குமிடத்தில் நுழைந்து ஏதேஷ்டமாக மோட்டார் போட்டுக்கொண்டு பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள்.
மெயிண்டெனென்ஸ் தொகையைத் தராததோடு, இரண்டு பெண்கள் மட்டுமே தங்கவிருப்பதாகப் பொய் கூறி தற்போது அந்த வளாகத்தில் பல பெண்களைச் சேர்த்துக் கொண்டு பெண்கள் ஹாஸ்டலையே நடத்தி வருவதோடு, ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினால் குண்டர்களை அழைத்து வந்து மிரட்டும் அளவுக்குச் செல்லும் இவர்களைப் பற்றி நான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து விட்டேன். அரசு தரப்பில் வீட்டைக் காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், இங்கேயோ, லஞ்சம் கொடுத்து விட்டு இவர்கள் வீட்டைக்காலி செய்யாமல் இன்னும் இங்கேயே இருந்து கொண்டு 97 வயதான என்னை தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காந்தியவாதியான என்னால் என்ன செய்து விட முடியும்? இன்னும் சில நாட்கள் போனால் இவர்கள் வீட்டுக் கதவை உடைப்பார்கள். என்னையும் தாக்கினாலும் ஆச்சர்யமில்லை.
எனவே இதில் அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரேனும் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். என்கிறார் பெரியவர் வி கல்யாணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.