உளுந்தூர்பேட்டை வட்டம் வடகுறும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் மற்றொரு தரப்பினர், சங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை பூட்டுபோட்டு போராட்டம் நடத்தினர்.
இச்சங்கத்துக்கான தலைவர் தேர்தல், தேர்தல் அலுவலர் சொக்கலிங்கம் மற்றும் செயலர் அன்பரசு ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பதவிக்கு அதிமுக-வைச் சேர்ந்த பில்ராம்பட்டு சுப்பிரமணியன் என்பவரும், வடகுறும்பூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித்தலைவர் கதிரேசன் என்பவரும் போட்டியிட்டனர்.
இரு தரப்பினரும் அதிமுக-வைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமரசம் பேசப்பட்டது.
இதில் சுப்பிரமணியனை தலைவராகவும், துணை தலைவராக கதிரேசனும் தேர்ந்தெடுக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத கதிரேசன் தரப்பினர் கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்டுப்போட்டு பூட்டி போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த எலவனாசூர்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கதிரேசன் உடன்படாததால் சுப்பிரமணியனை தலைவராகவும், கூவாடு கிராமத்தைச் சேர்ந்த கீதா-வை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








