

பீட்ஸா, பாஸ்தா போன்ற உணவுவகைகளின் மீது எனக்குத் தீராத மோகம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களுடன் இதுபோன்ற உணவு விற்பனைக் கூடங்களில் அடிக்கடி சென்று சாப்பிடுகிறேன். ஆனாலும் பலர் இவை கெடுதல் என்று கூறுகின்றனர். அப்படிக் கெடுதல் என்றால் சுவைமாறாமல் இவற்றை நல்ல உணவாக மாற்றிச் சாப்பிட ஏதேனும் வழி உள்ளதா? அவற்றை ஜங்க் ஃபுட் என்று ஏன் கூறுகின்றனர்?
முரளி, சென்னை-40.
பொதுவாக ஜங்க் ஃபுட்ஸ் என்றாலே ஊட்டச் சத்து இல்லாத, லாயக்கில்லாத உணவு என்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் கெடுதல் என்று ஓர் அபிப்ராயம் மக்களிடையே காணப்படுகிறது. சிலரிடம் ஜங்க் ஃபுட்ஸ் பற்றிய ஒரு பட்டியலைத் தயாரிக்கச் சொன்னால் அவற்றில் பீட்ஸô, பாஸ்தா, பர்கர், ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், ஹாட்டாக்ஸ் சோமின், ஸ்பிரிங் ரோல்ஸ், மோமோஸ், நூடூல்ஸ் போன்றவை கண்டிப்பாக இடம் பெறும். இவை கெடுதல் என்று ஒரு சாரார் கூறினாலும் இன்றைய இளைய தலைமுறையினரால் அதிகம் விரும்பப்படுவதால் அவற்றின் விற்பனை அமோகமாக இருக்கின்றன.
இவற்றில் உள்ள கெடுதி என்ன? முதலாவதாக அவற்றில் கோதுமையிலுள்ள நார்ச்சத்து நீக்கிய மைதா மாவினால் தயாரிக்கப்படுவது. இரண்டாவது, அதிக மிருகக் கொழுப்பு சத்து வகைகளான சிக்கன், மட்டன், சீஸ், க்ரீம் ஆகியவை சேர்க்கப்படுவது, மூன்றாவதாக, அவற்றில் பல, எண்ணெய்யில் பொரிக்கப்படுவது. இவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் என்ன? உடல் பருமனும், இதய நோய்களும்தான்.
இவற்றில் என்ன வகையான மாற்றங்களைக் கொண்டுவந்தால் அவை ஆரோக்கிய உணவாகவும், அதே சமயத்தில் சுவையான உணவாகவும் மாறக் கூடும்? முதலாவதாக, நார்ச்சத்து அவற்றில் சேர்க்கப்பட வேண்டும். இரண்டாவதாக மைதாவிற்குப் பதிலாக முடிந்தவரை கோதுமையைச் சேர்க்கலாம். மூன்றாவதாக மிருகக் கொழுப்புக்குப் பதிலாக, ஆடை நீக்கிய கொழுப்புச் சத்து குறைந்த தயிர், பச்சைக் காய்கறிகளுடன் சேர்க்கப்பட்டு உபயோகப்படுத்தலாம். தொட்டுக் கொள்ள தக்காளிச் சட்னி, புதினா சட்னி உபயோகிக்கலாம். எண்ணெய்யில் பொரிப்பதற்குப் பதிலாக எண்ணெய் ஒட்டாத தோசைக் கல்லிலோஅல்லது ஓவன் அடுப்பிலோ ரோஸ்ட் செய்து சாப்பிடலாம்.
சமைப்பதற்கு நேரம் குறைவாக உள்ள நகர வாழ்க்கையில் மாற்றங்களைத் துரித உணவு வகைகளில் கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கெடாமலும், மேற்கத்திய உணவு வகைகளைச் சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.
பலரும் இது போன்ற உணவுகளைத் திட்டிக் கொண்டே, எண்ணெய்யில் பொரித்த சமோஸô, பகோடா, ஜிலேபி, லட்டு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுகின்றனர். உண்மையாகக் கூறினால் நீங்கள் விரும்பிச் சாப்பிடும் உணவுவகைகளை விட இவர்கள் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் அதிகமான கெடுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.
எத்தனை சுவையுடன் இவை இருந்தாலும் நமதுநாட்டுப் பாரம்பர்ய உணவு வகைகளுக்கு நிகராக எதுவும் இருக்க முடியாது. ஆகையால் நீங்கள் மறுபடியும் நூறு சதவிகிதம் நம்முடைய உணவுமுறைகளை விரும்பிச் சாப்பிடத் தொடங்கிவிடுவீர்கள் என்ற திடமான நம்பிக்கை இருக்கிறது. முதலில் முக்கால் பங்கு மேற்கத்திய உணவு, கால் பங்கு நம்நாட்டு உணவு என்று மாறுங்கள். அடுத்த முறை முன்னது அரைப் பங்கு, நம்முடையது அரைப் பங்கு, அதற்கு அடுத்ததாக முன்னது கால் பங்கு, நம்முடையது முக்கால் பங்கு என்ற விகிதத்தில் உபயோகித்து, அதன்பின் நம்முடைய உணவுமுறைகளை முழுவதுமாகப் பயன்படுத்தவும். இப்படியாக மெதுவாக ஒரு பழக்கத்திலிருந்துவிடுபட்டு, வேறு ஒரு நல்ல பழக்கத்திற்கு மாறுவது என்பது நிரந்தர லாபத்தைத் தரும் ஆரோக்கிய வழியாகும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.