பாஸ்டன் சுங்க அலுவலகம் வாசலில் காவலில் இருந்த பிரிட்டிஷ் சிப்பாயுடன், ஒரு கடைக்காரரின் வேலையாளுக்கு ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் வாய்த் தகராறு முற்றி, பெரும் மக்கள் கூட்டம் அங்கே திரண்டு, சிப்பாய்களுக்கு எதிரான கல்வீச்சில் ஈடுபட்டது. சிப்பாய்கள் சுட்டதில் ஐந்து பேர் இறந்தார்கள். மார்ச் 5, 1770-ல் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம், நகரில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் இருப்பது பற்றி, உள்ளூர் வாசிகளுக்குத் தொடர்ந்து இருந்து வந்த வெறுப்புதான். இதையடுத்து, பிரிட்டிஷ் சிப்பாய்கள் நகருக்கு வெளியே அனுப்பப்பட்டார்கள். விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த சம்பவத்தில் ஆச்சரியமான விஷயம், விடுதலைப் போராட்ட வீரர் ஜான் ஆடம்ஸ் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக, கொலைக் குற்றம்சாட்டப்பட்ட சிப்பாய்கள் சார்பாக வாதாடியதுதான். இவர்தான் அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதியாக பின்னாளில் இருந்தவர். சிப்பாய்கள் துப்பாக்கிச்சூடு செய்வதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், கொலை செய்யும் நோக்கில் சுடவில்லை. தங்கள் தற்காப்புக்காகத்தான் சுட்டார்கள் என்று வாதாடி, அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்காமல் செய்தார் ஆடம்ஸ்.