/

சிறுகதை: தன் வினை பிறரைச் சுடும்!

பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அங்கயற்கண்ணி கொஞ்சம் தாமதமாய்த்தான் போய்ச் சேர்ந்தாள். மையத்தின் சூப்பர்வைசர் ஏற்கெனவே பரிச்சயமானவர். ""என்ன டீச்சர், முதல்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:07 pm

சோ.சுப்புராஜ்

பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அங்கயற்கண்ணி கொஞ்சம் தாமதமாய்த்தான் போய்ச் சேர்ந்தாள். மையத்தின் சூப்பர்வைசர் ஏற்கெனவே பரிச்சயமானவர். ""என்ன டீச்சர், முதல் நாளே லேட்டா வர்றீங்க? வழக்கம் போல ட்ரெயின் லேட்டா?'' என்றவர், ""உங்களப் பார்த்தே தீருவேன்னு ஒருத்தர் காலையிலிருந்து காத்திருக்கிறார். என்னன்னு விசாரிச்சுட்டு வந்துருங்க?'' என்று ஒரு நமட்டுச் சிரிப்புடன் அனுப்பி வைத்தார்.

உறவுகளே இல்லாமலாகிவிட்ட வாழ்க்கையில் நம்மை யார் தேடி வந்திருக்கிறார்கள்? சூப்பர்வைசரின் சிரிப்பைப் பார்த்தால் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கும் போலிருக்கிறதே என்று மனசுக்குள் நிழலாடும் கேள்விகளுடன், தேடி வந்தவரை அணுகி விசாரித்தபோது அவர் சென்னையிலிருக்கும் ஒரு பிரபல பள்ளியின் புரோக்கர் என்று தெரிந்தது.

அந்தப் பள்ளியின் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் இந்த மையத்திற்குத் தான் திருத்துவதற்கு வந்திருக்கிறது என்றும், அவை இவளிடம் வந்தால் தாராளமாக மதிப்பெண்களைப் போடவேண்டும் என்றும் அப்படிச் செய்தால் ஒரு பேப்பருக்கு இவ்வளவு என்று கொடுத்து விடுவதாகவும் சொல்லி ஒரு பெருந்தொகையை முன்பணமாகவும் கொடுக்க முன் வந்தார். அங்கயற் கண்ணி அவரைத் திட்டி அனுப்பி விட்டு விடைத்தாள் திருத்தும் அறைக்குள் போனாள்.

""என்ன டீச்சர் நல்ல அறுவடையா?'' என்றார் சூப்பர்வைசர் கிண்டலாய்ச் சிரித்தபடி.

""அட, நீங்க வேற ஏன் ஸôர் வெறுப்பேத்துறீங்க. டம்மி நம்பர் அது இதுன்னு போட்டு எல்லாம் ரகசியமா வச்சிருந்தும் எப்படி ஸôர் பேப்பர ட்ரேஸ் பண்ணி வந்துடுறாங்க?'' என்றாள் சலிப்புடன்.

அவள் திருத்துவதற்கான பேப்பர் கட்டைக் கொடுத்தார் சூப்பர்வைஸர்.

""இது எந்த ஸ்கூல் பேப்பர் ஸôர் ?'' என்று அங்கயற்கண்ணி கேட்கவும் அடையாறிலிருக்கும் பிரபல பள்ளியின் பெயரைச் சொன்னார் அவர். அங்கயற்கண்ணிக்கு சிலீரென்றிருந்தது. அந்தப் பள்ளியில்தான் அவளின் மகள் அன்புச்செல்வி ஒன்பதாம் வகுப்பு வரைப் படித்தாள். பத்தாம் வகுப்பில் தொடர்ந்து படிக்க அனுமதி மறுத்து விட்டார்கள்.

சென்ற வருஷ ஜூன் மாதத்தின் மத்தியில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்து கொஞ்ச நாட்களாகியிருந்த நிலையில், அன்புச் செல்வி படிக்கும் பள்ளி நிர்வாகம் அங்கயற் கண்ணியை பள்ளிக்கு அழைத்திருந்தது. அலுவலக உதவியாளன் அனுமதிக்கவும், அவள் அன்புச்செல்வியையும் அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியையின் அறைக்குள் நுழைந்தாள். இவள் வணக்கம் சொன்னதைக் கூட கவனிக்காத பாவனையில் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு, ""நீங்கதான் அன்புச் செல்வியோட அம்மாவா?'' என்றாள் தலைமை ஆசிரியை.

இவள் ""ஆமாம்'' என்று பவ்யமாய்த் தலை அசைக்கவும், ""பொம்பளப் பிள்ளைய இப்படியா பொறுப்பில்லாம வளப்பீங்க? அறிவியல்லயும் ஆங்கிலத்துலயும் இவ சிங்கிள் டிஜிட் மார்க்கத் தாண்டுறதே இல்ல. இதெல்லாம் நீங்க கவனிக்கிறதே இல்லையா? என்னவா வேலை பார்க்குறீங்க?'' என்றாள்.

""அரசு மேல்நிலைப் பள்ளியில ஆசிரியரா இருக்கேன் மேடம்''

அவளுக்கு ஆங்காரமாய்க் கோபம் வந்தது. ""ஆசிரியர் பிள்ளை மக்குன்னு நீங்க ரெண்டு பேரும் நிரூபிக்கலைன்னு யாரு அழுதாங்க'' என்று சிடுசிடுத்தாள்.

""இல்ல மேடம், வீட்ல கொஞ்சம் பிரச்னை. நானும் காட்பாடியத் தாண்டி ரொம்ப தூரம் வேலைக்குப் போயிட்டு வர்றதால இவளக் கவனிக்க நேரமிருக்கிறதில்ல. இனிமே பார்த்துக்கிறேன்''

""டூ லேட். காரியம் கொஞ்சம் கை மீறிப் போயிருச்சு, இனிமே ஒண்ணும் பண்ண முடியாது. உங்க பொண்ணோட டீ.சி.யக் குடுத்துடுறோம், நீங்க வேற ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சுக்குங்க''

அங்கயற்கண்ணி எவ்வளவோ கெஞ்சியும் தலைமை ஆசிரியை ஒத்துக் கொள்ளவே இல்லை. ""வேணும்னா ஒண்ணு பண்ணலாம் எங்க ஸ்கூல்லயே தொடர்ந்து படிக்கட்டும். ஆனா எங்க ஸ்கூல் ரோல்ல வராம பரீட்சைய பிரைவேட்டா பணம் கட்டி வெளி மாணவர்களோட சேர்ந்து எழுதட்டும் ஒருவேளை பாஸ் பண்ணீட்டாள்னா ப்ளஸ் ஒன்னுக்கு எங்க ஸ்கூல்லயே சேர்த்துக்குறோம் அதுக்குன்னா ஏற்பாடு பண்ணட்டுமா?''

""அய்யோ வேண்டாம் மேடம். அது சரியா வராது.கொஞ்சம் பெரிய மனசு பண்ணி'' அங்கயற்கண்ணி முடிப்பதற்குள் சீறினாள் தலைமை ஆசிரியை.

""சொன்னாப் புரிஞ்சுக்குங்க மேடம். இது என்னோட தனிப்பட்ட முடிவில்ல. மேனேஜ் மென்ட்டோட முடிவு. உங்க பொண்ண பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனுப்பினா கண்டிப்பா ஃபெயிலாயிடுவா அது எங்க பள்ளிக்கே பெரிய களங்கமாப் போயிடும். 20 வருஷங்களுக்கும் மேலா பத்தாம் வகுப்புலயும் பிளஸ் 2 -யும் 100% பாஸ் ரிசல்ட் காண்பிச்சுட்டு வர்றோம் அதோட ஸ்டேட் ரேங்க் வாங்குற ஸ்கூல்ல ஃபெயிலியர் வந்தா பேர் கெட்டுடாதா?''

அப்போது ஒரு நடுத்தர வயதுப் பெண் அறைக்குள் வந்து, ""நான்தான் இவளோட கிளாஸ் டீச்சர் மேம். ஸ்பெஷல் கேர் எடுத்துப் பார்த்துக்கிறேன் மேம்நாம ஒரு சான்ஸ் குடுத்துப் பார்க்கலாம் மேம்'' என்று அன்புச்செல்விக்காகப் பரிந்து பேசவும், தலைமை ஆசிரியைக்கு பலியாய் கோபம் வந்து விட்டது. ""யாரக் கேட்டு உள்ள வந்த, மேனர்ஸ் இல்லாம. உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு. ஃபெயிலாயிட்டா மேனேஜ்மென்ட்டுக்கு நீயா வந்து பதில் சொல்வ. கெட் அவுட் '' என்று சீறினாள். அங்கயற்கண்ணிக்கு அந்த டீச்சரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

அன்புச்செல்வியின் டீ.சி.யை கிழித்துக் கொடுத்து, பெஸ்ட் ஆஃப் லக் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தாள் தலைமை ஆசிரியை.

என்ன செய்வதென்று தெரியாமல், முகவாட்டத்துடன் வெளியே வந்த அங்கயற் கண்ணியை அன்புச்செல்வியின் வகுப்பாசிரியை தான் தேற்றினாள். தன் பெயரைத் தங்கம்மாள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். ""இது சரியான முசுடு மேடம். ரிசல்ட், ரிசல்ட்டுன்னு பேயா அலையும். இதுவரைக்கும் இவளோட சேர்த்து ஏழு பேருக்கு டீ.சி. குடுத்து அனுப்பீருச்சு... அஞ்சு பேர பிரைவேட்டா எழுதச் சொல்லிருச்சு ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான்... தேறாதுன்னு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் பேரண்ட்ஸக் கூப்பிட்டு டீ.சி.யக் குடுத்துருவாங்க. அப்புறம் நூறு சதவிகிதம் தேர்ச்சி காண்பிச்சுட்டோம்னு பீத்திக்குவாங்க... விடுங்க இவங்க புரஜெக்ட் பண்ற அளவுக்கு அன்புச்செல்வி ஒண்ணும் அத்தனைக்கு மோசமான ஸ்டூடண்ட் இல்ல . இப்ப கொஞ்ச நாளாத்தான் ரொம்பவும் டல்லா இருக்கிறா, வீட்ல எதுவும் பிரச்னையா?'' என்றாள். அவளின் பேச்சில் நிஜமான கரிசனம் தெரிந்தது.

""நீங்க கவலைப் படாதீங்க அன்புச்செல்விய நான் தேத்திக் காண்பிக்கிறேன்'' என்றாள் தங்கம்மாள் சவாலாக.

வில்லிவாக்கத்துலருந்து தினசரி வந்து போனால் பயணத்துலயே இவள் கலைத்துப் போயிடுவாள் என்றும் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்றும் தங்கம்மாள் அபிப்ராயப் பட்டாள். அவளின் ஆலோசனைப்படி அன்புச்செல்வியை அங்கயற்கண்ணி குடியிருந்த திருவான்மியூர் பகுதியில் ஓர் அரசாங்க மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்த்து விட்டு அவளைத் தன்னுடைய வீட்டிலிருந்து பள்ளிக்குப் போய் வர ஏற்பாடுகள் செய்தாள்.

""ஒரு வருஷம் உங்க பொண்ணை நீங்க மறந்திடுங்க , நான் பார்த்துக்கிறேன்'' என்றாள். அப்படியே ஆனது. அந்த வருஷமே அன்புச்செல்வி தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலாக மதிப்பெண் எடுத்துத் தேறினாள். தொடர்ந்து அரசாங்க பள்ளியிலேயே இப்போது ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கிறாள்.

""என்ன டீச்சர், பேப்பரயே பார்த்துக்கிட்டு இருக்கிறீங்க? திருத்தத் தொடங்கலயா?'' என்று மையத்தின் சூபர்வைசர் கேட்கவும் தான் நினைவு கலைந்து நிகழ் காலத்திற்கு வந்தாள் அங்கயற்கண்ணி. இது தற்செயலானதா, அல்லது விதியின் விளையாட்டா என்று தெரியவில்லை. இதோ தன் செல்ல மகளுக்கு டீ.சி. கொடுத்து அவமானப்படுத்தி அனுப்பிய அடையாறு பள்ளியின் பேப்பர்கள் திருத்துவதற்காக அவளுக்கு முன் விரிந்து கிடக்கின்றன. ஃபெயிலாகிப் போவாள் என்று தானே என் பெண்ணிற்கு டீ.சி.கொடுத்து அனுப்பினீர்கள்... இதோ உங்கள் பள்ளியின் எதிர்காலம் என் கையில்... என் பேனாவின் முனையில்... அவளுக்குள் ஒரு வன்மம் கிளர்ந்தது.

கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு ஒவ்வொரு பேப்பரையும் மிக மிகக் கவனமாக திருத்தத் தொடங்கினாள். சிறுபிழை என்றாலும் தடாலடியாக மதிப்பெண்களைக் குறைத்தாள். இது அவளுடைய இயல்பே அல்ல. பொதுவாய் மதிப்பெண்களை கர்ணபிரபு மாதிரி வாரி வாரி வழங்குவதுதான் அவளது வழக்கம். மாணவர்கள் 25 மதிப்பெண்களை நெருங்கி விட்டாலே, அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் போட்டு 35க்குக் கொண்டு வந்து பாஸôக்கி விடுவாள்.

ஆனால் இந்த முறை அப்படிச் செய்யவில்லை. ஐந்து மாணவர்கள் 30,33 என்று பாஸýக்குப் பக்கத்தில் வந்தும், எந்த மாற்றமும் செய்யாமல், எங்கள் பள்ளியில் யாரும் ஃபெயிலாக மாட்டார்களென்று பெருமை பீற்றினீர்களே, இதோ அந்த வரலாற்றை உடைக்கிறேன் என்று மனசுக்குள் கறுவியபடி விடைத்தாள்களைக் கட்டி சூபர்வைசரிடம் ஒப்படைத்தாள் அங்கயற்கண்ணி. ஆங்கில மீடியம் பள்ளி என்று அலப்பறை பண்ணும் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டுமென்றும் தமிழில் பேசினால் தண்டம் விதிக்கும் பள்ளியில் ஆங்கிலப் பாடத்திலேயே ஐந்து பேர் ஃபெயிலென்றால்.. அது எத்தனை முரண்? அந்த தலைமை ஆசிரியை முகத்தை எங்கு போய் வைத்துக் கொள்வாள். மனசுக்குள் குரூரமாகச் சிரித்துக் கொண்டாள் அங்கயற்கண்ணி.

""என்ன டீச்சர், அஞ்சு பேர பார்டர்ல ஃபெயிலாக்கி இருக்குறீங்க? நீங்க பொதுவா அப்படிப் பண்ற ஆளு இல்லயே, எத்தனை வருஷமா உங்களப் பார்த்துக்கிட்டு இருக்கிறேன். இன்னைக்கு என்னாயிருச்சு?'' என்று கேட்ட சூபர்வைசரிடமும், "" அதெல்லாம் அரை மார்க் போடக்கூட எடமில்ல ஸôர்... ஃபெயிலாப் போகட்டும். அப்பத் தான் அவங்களுக்கெல்லாம் புத்தி வரும்'' என்றாள் வெளத்துடன்.

""வேண்டாம் டீச்சர் பசங்க பாவம். யாரு மேலயோ உள்ள கடுப்புல பசங்களோட எதிர்காலத்தப் பாழ் பண்ணீடாதீங்க'' என்று அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லிய போதும் அவள் பிடிவாதமாய் மறுத்து விட்டாள்.

கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாக, பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவுகள் வெளியாகி ஓரிரு தினங்களுக்குப்பின் தினப்பத்திரிக்கையில் வந்திருந்த அந்த செய்தியை வாசித்த அங்கயற்கண்ணி அலறிவிட்டாள்.

அடையாறிலுள்ள மிகப் பிரபலமான தனியார் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றும், இதைக் கேள்விப் பட்டதும் அந்தப் பாடத்தைப் போதித்த ஆசிரியை திருமதி தங்கம்மாள் (43) நேற்று முன்தினம் அவருடைய வீட்டிலிருக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் , உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் சக ஆசிரியை ஒருவரின் மூலம் அருகாமையிலிருந்த அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் தினப் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது.

அங்கயற்கண்ணிக்கு மனசு வலித்தது. தான் செய்த முட்டாள்தனத்தால் ஓர் அற்புதமான மனுஷியின் உயிரல்லவா போய்விடும் போலிருக்கிறது. கண்டிப்பாக ஃபெயிலாகி விடுவாள் என்று நம்பிய தன்னுடைய மகள் அன்புச்செல்வியை எப்படி பயிற்சி கொடுத்து அவளே ஆச்சர்யப்படும் விதமாக மிக நல்ல மதிபெண்களில் தேர்ச்சி பெற வைத்திருந்தாள். அந்த தங்கம்மாள் டீச்சருக்கா இந்த நிலைமை? அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று மனசுக்குள் மறுகினாள்.

அன்புச்செல்வியையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போனபோது தங்கம்மாள் அபாயக் கட்டத்தைத் தாண்டி ஆனால் மிகவும் சோர்ந்து போய் படுத்திருந்தாள். அவளின் படுக்கையைச் சூழ்ந்து கொண்டு சக ஆசிரியைகளும் மாணவர்களும் நிறையப்பேர் நின்று கொண்டிருந்தார்கள். அன்புச்செல்வி ஓடிப்போய் ஆசிரியையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கவும், ""அய்யோ எனக்கு ஒண்ணுமில்லைடா.. ஐயாம் ஆல்ரைட்'' என்று அவளைச் சமாதானப்படுத்தினாள்.

அங்கயற்கண்ணி அவளுக்கு அருகில் போய் மிக மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக, ""ஸôரி டீச்சர்... உங்களோட இந்த நிலைமைக்கு நான்தான் காரணம் ''என்றாள் குற்ற உணர்ச்சி மேலிட. அங்கயற்கண்ணியை முழுதாகப் பேசவிடாமல்,

""அய்யய்யோ, நான் முட்டாள்தனமாக ஏதோ பண்ணதுக்கு நீங்க என்ன மேடம் பண்ணுவீங்க? பாஸ் ஃபெயிலெல்லாம் பரீட்சையில சகஜம்னு யோசிக்காம அவசரத்துல ஏதோ பண்ணீட்டேன். அந்தப் பசங்க பரீட்சையில் பெயிலானத என் டீச்சிங்கிற்கான தோல்வியா நெனைச்சு ஒரு நிமிஷம் தடுமாறிட்டேன்'' என்றாள் விரக்தியாய்.

உண்மையைச் சொல்லி இனி என்ன ஆகப் போகிறது என்று மெüனம் காத்தாள் அங்கயற்கண்ணி.

பெயிலாகிப் போன அஞ்சு மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்தபோது முட்டாள்தனமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டோமே என்று தோன்றியது அங்கயற்கண்ணிக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.