இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆப்பிள் தேசம் - 23: கப்பல் ஏறுவதற்கு 29 கேள்விகள்!

ஐரோப்பாவிலிருந்தும் இதர நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கில் அமெரிக்காவுக்கு 1800களில் புறப்பட்டு வந்தவர்கள் யார்? ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருந்தன.  பின்னாளில் அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஜான

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:16 am

ஞாநி

ஐரோப்பாவிலிருந்தும் இதர நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கில் அமெரிக்காவுக்கு 1800களில் புறப்பட்டு வந்தவர்கள் யார்? ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருந்தன.  பின்னாளில் அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஜான்.எஃப்.கென்னடி இதுபற்றி சொல்லும்போது ""எத்தனை பேர் வந்தார்களோ அத்தனைக் காரணங்கள் இருந்தன'' என்றார்.

தங்கள் மத நம்பிக்கைகளுக்காக ஒடுக்கப்பட்டதிலிருந்து விடுதலை தேடி வந்தவர்கள், அரசியல் கருத்துகளுக்காக கொடுமைக்குள்ளாகித் தப்பித்துத் தஞ்சம் புகுந்தவர்கள், தங்கள் நாட்டில் கடும் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கும் நிலையில் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள், வாழ்க்கையில் ஏதேனும் சாகசம் செய்யவேண்டும் என்ற துடிப்பில் மட்டுமே வந்தவர்கள் எனப் பல தரப்பட்ட மக்கள் அமெரிக்காவுக்கு வந்தார்கள்.

எல்லிஸ் தீவு அருங்காட்சியகத்தில் இருக்கும் படங்கள், பொருட்கள், ஆவணங்கள், சிறு வெளியீடுகள் ஆகியவற்றிலிருந்து அந்தப் புலம் பெயர்தல் எப்படியிருந்திருக்கும் என்று இப்போதும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

பெரும்பாலானவர்களுக்கு அந்தப் புலம் பெயர்தல் ஒரு குடும்ப நிகழ்ச்சியாக இருந்தது. குடும்பத்திலிருந்து ஒருவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்காக, மற்றவர்கள் உழைத்து சேமித்தார்கள். குடும்பத்திலிருந்து ஒருவர் முதலில் அமெரிக்கா சென்று செட்டில் ஆனதும் மெல்ல மெல்ல இதர உறுப்பினர்களை அமெரிக்காவுக்கு வரவழைக்கும் போக்கு அப்போதே ஆரம்பித்துவிட்டது.

1900 முதல் 1910 வரை எல்லிஸ் தீவில் நுழைந்தவர்களில் 95 சதவிகிதம் பேருக்கு ஏற்கனவே அமெரிக்காவில் ஓர் உறவினரோ நண்பரோ இருந்தார்கள்.  

அந்த உறவினரோ நண்பரோ முன்கூட்டியே காசு கொடுத்து டிக்கட் வாங்கி அனுப்பி வந்தவர்களாகவே பாதி பேருக்கு மேல் இருந்தார்கள். முக்கிய கப்பல் கம்பெனிகள் அனைத்தும் இதற்காகவே  அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏஜெண்ட்டுகளை வைத்திருந்தன. இவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று கப்பல் பயண டிக்கட்டுகளை விற்றார்கள்.

இந்த டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டு

கிராமங்களிலிருந்து புறப்பட்டு வந்த பலர் வாரக்கணக்கில் துறைமுகங்களில் கப்பலுக்காகக் காத்திருந்தார்கள். இவர்களுக்காகக் காத்திருப்பு விடுதிகள் இயங்கத் தொடங்கின.

கப்பலில் ஏறுவதற்கு முன்னால், பயணியிடம் 29 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தப் பதில்கள் பதிவு செய்யப்பட்டு ஆவணமாக்கப்பட்டன. பெயர், வயது, பால், மொழி, இனம், மண நிலை, உடல் நலம், அறிவு முதிர்ச்சி, எழுதப் படிக்கத் தெரியுமா,போன்றவை தவிர போகும் ஊரில் தெரிந்தவர் யார், அவர் முகவரி முதலியனவும் கேட்கப்பட்டன. பல தார மணத்தை ஆதரிப்பவரா, அரசியலில் அராஜகக் கொள்கை உடையவரா என்றெல்லாம்கூட விசாரித்தார்கள். கையில் குறைந்தபட்சம் முப்பது டாலராவது இருக்கிறதா என்று சோதிக்கப்பட்டது. மருத்துவ சோதனைகளும் கப்பலில் ஏறும் முன்பே செய்யப்பட்டன, தடுப்பூசிகள் கட்டாயமாகப் போடப்பட்டன.

இப்படி பல நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற கப்பல்களில் மூன்று வகையான பயணிகள் இருந்தார்கள். முதல், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்குக் கப்பலிலேயே அடுத்த கட்ட விசாரணை முடிக்கப்பட்டது. எல்லிஸ் தீவில் இறங்கியதும் அவர்கள் விரும்பிய பகுதிக்கு நேரே சென்றுவிடலாம். ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் எல்லிஸ் சாவடி விசாரணையில் தேர்வானால்தான் அமெரிக்காவில் நுழைய முடியும்.

இந்தப் பயணிகளின் எண்ணிக்கைதான் மிக அதிகம்.  ஒவ்வொரு கப்பலிலும் சுமார் 2 ஆயிரம் பேர் வரை ஆளுக்கு 30 டாலர் கொடுத்து சென்றார்கள். கப்பல் கம்பெனிகள் பெரும் லாபம் சம்பாதித்தன. தினசரி இந்தப் பயணிகளின் சாப்பாட்டுக்காக கம்பெனிகள் செலவிட்ட தொகை தலைக்கு வெறும் 60 செண்ட்டுதான். (100 செண்ட்  ஒரு டாலர்.) கப்பல் பயணம் இந்தப் பயணிகளுக்கு நரக வேதனையாக இருந்தது. வெளிச்சம் இல்லாத, காற்று வசதி இல்லாத அறைகளில் மந்தை மந்தையாக அடைக்கப்பட்டிருந்தார்கள்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு 1911-ல் தரப்பட்ட ஓர் அறிக்கையில் இந்தப் பயணிகளின் நிலை பற்றி உருக்கமாகச் சொல்லப்பட்டது. கப்பலிலேயே மோசமான பகுதிதான் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. சரக்கு மூட்டைகளின் தூசி, கடல் பயணம் தாங்கமுடியாமல் எடுக்கப்பட்ட வாந்தி ஆகியவற்றுக்கு நடுவே முடை நாற்றமடிக்கும் காற்றை சுவாசித்தபடி, தரப்படும் சொற்ப சாப்பாட்டைக் கூட நின்றபடியே கப்பல் வராந்தாவில் சாப்பிட்டுக் கொண்டு, குடிப்பதற்கு உப்புத் தண்ணீர் தவிர வேறெதுவும் இல்லாமல், பத்துப் பதினைந்து தினங்கள் முதல் ஒரு மாதம் வரை இவர்கள் கடலில் அமெரிக்கக் கனவுகளுடன் பயணம் செய்தார்கள்.

சீட்டு ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்ட பயணிகள், பெரும்பாலான நேரம் ஒருவரோடொருவர் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தார்கள். அமெரிக்கா எப்படி இருக்கும், விசாரணையில் தப்பிப்போமா, என்னவெல்லாம் கேட்பார்கள், எப்படி பதில் சொல்வது என்ற உரையாடல்களிலேயே  பொழுதைக் கழித்தார்கள். எல்லிஸ் தீவிற்கு கப்பல் வந்து சேரும்போது சராசரியாக நூற்றுக்கு பத்து பேர் கப்பலிலேயே செத்துப் போயிருந்தார்கள்.

கரைக்கு வந்தாலும் கப்பலிலிருந்து யாரையும் இறங்க விடுவதில்லை. மருத்துவர்கள் கப்பலுக்குள் சென்று பயணிகளைச் சோதித்தார்கள். தொற்று நோய்கள் இருக்கக் கூடியவர்களை அப்புறப்படுத்தி தனிமைப்படுத்தினார்கள். முதல், இரண்டாம் வகுப்புப் பயணிகள் மட்டுமே இந்த மருத்துவ சோதனையில் பெரிதும் தேறினார்கள். எடுத்துக்காட்டாக 1901}ல், மொத்தம் ஒரு லட்சம் முதல், இரண்டாம் வகுப்புப் பயணிகளில் வெறும் 3000 பேர் மட்டுமே அடுத்த கட்ட மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால், மூன்றாம் வகுப்பில் பயணித்த எட்டு லட்சம் பேரும் கரையிலும் மறுபடி சோதனைக்குட்படுத்தப்பட்டார்கள்.

மேல்தட்டுப் பயணிகளை மன்ஹாட்டன் கரையில் இறக்கிவிட்டு, மற்றவர்களை எல்லிஸ் தீவுக்குக் கொண்டு செல்வது வழக்கம். ஒவ்வொரு பயணியின் உடையிலும் பெரிய அடையாள அட்டை மாட்டப்பட்டது. இதில் அவர்களுடைய ஆவண எண் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். முப்பது முப்பது பேராகப் பிரித்து படகில் எல்லிஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

அவர்களை முதலில் வரவேற்பவர் மொழிபெயர்ப்பாளர்தான். இந்த மொழிபெயர்ப்பாளர்களின் கருணையில்தான் ஒவ்வொரு பயணியும் விசாரணையில் தப்பித்துத் தேறி செல்ல முடியும்.

ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் குறைந்தபட்சம் ஆறு மொழிகள் தெரிந்திருந்தன. மிக அதிகபட்சமாக ஒருவர் 15 மொழிகள் வரை பேச அறிந்திருந்தார்.

முதல் கட்டத்தில் அத்தனை பயணிகளும் மாடிப்படிகள் ஏறி முதல் மாடியில் இருக்கும் பதிவுக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். படியில் ஏறுவதே ஒரு பரிசோதனைதான். ஏறுபவர்களைக் கண்காணித்தபடி மருத்துவர்கள் நிற்பார்கள். நோயாளியின் நடையா, மூளை வளர்ச்சியில்லாதவரின் நடையா என்றெல்லாம் பார்வையிலேயே எடை போடுவார்கள். மருத்துவர் தேர்ந்தெடுக்கும் பயணியின் உடை மீது சாக் பீசில் ஏதேனும் ஓர் ஆங்கில எழுத்தை எழுதி அனுப்புவார். அது அந்தப் பயணியை எப்படிப்பட்ட விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்பதற்கான சங்கேதக் குறிப்பு. பத்து பேரில் இருவரேனும் இதில் சிக்குவார்கள்.

வலது தோளின் மேலே பெரிதாக எக்ஸ் என்று எழுதியிருந்தால், அந்தப் பயணி மூளை வளர்ச்சியற்றவர் என்று சந்தேகிப்பதாக அர்த்தம்.  சற்று கீழே அதையே எழுதினால், ஏதேனும் உடல் ஊனம் இருக்கலாம் என்பதாகப் பொருள். ஒரு வட்டம் போட்டு அதற்குள் எக்ஸ் என்று எழுதினால், ஏதோ நோய்க்கான ஓர் அறிகுறி உறுதியாகத் தெரிவதாக அர்த்தம். "பி' என்று எழுதினால், பின்புற முதுகுப் பிரச்னை இருப்பதாகப் பொருள். பிஜி என்றால் ப்ரெக்னன்சி (கர்ப்பிணி) என்ற அடையாளம்.

சில சமயங்களில் முப்பது பேர் உள்ள மொத்தக் குழுவையுமே கிருமி நாசினிகள் கலந்த தண்ணீரில் மொத்தமாகக் குளிப்பாட்டுவார்கள். இதைத் தாண்டிய பிறகு கண் மருத்துவர்கள் ஒவ்வொரு பயணியையும் சோதிப்பார்கள். கண் பார்வையை பாதித்து மெல்ல மரணத்துக்கே கொண்டு செல்லக் கூடிய டிரக்கோமா என்ற நோய் கண்ணில் உள்ளதா என்பதை சோதிப்பார்கள்.

அந்தக் காலத்தில் எல்லிஸ் சாவடியில் மருத்துவ சோதனைக்காக நிறுத்திவைக்கப்பட்டவர்களில் பாதி பேருக்கு மேல் இந்த கண் நோய் இருந்தவர்கள்தான்.

மருத்துவ சோதனையில் நிராகரிக்கப்பட்டவர்கள் பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்டிருந்தால், தனியே கப்பலில், புறப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.

அதற்கு கீழுள்ள குழந்தையானால் உறவினரில்  ஒருவரும் சேர்த்து திருப்பி அனுப்பப்படுவார். இந்த நிலை ஏற்பட்டால், அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் மன உளைச்சலும், சிரமமும் கொஞ்சநஞ்சமல்ல.

மருத்துவ சோதனைகள் முடிந்தபின் கடைசியாக இருக்கும் விசாரணை அதிகாரி தன்னிடம் இருக்கும் ஆவணத்தில், பயணி தெரிவித்த 29 தகவல்களும் சரியா என்று விசாரிக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் பயணியை விசாரிக்க அவருக்கு இருக்கக்கூடிய நேரம் வெறும் இரண்டு நிமிடம்தான்.

ஏனென்றால் அத்தனை பேர் கும்பல் கும்பலாகக் காத்திருப்பார்கள். எனவே பெரும்பாலான பயணிகள் அமெரிக்காவில் நுழையும் அனுமதியை பெற்றுவிடுவார்கள். மொத்தத்தில் நூற்றுக்கு இரண்டு பேர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார்கள்.  

அமெரிக்காவில் குடியேற, எல்லிஸ் தீவு விசாரணைச் சாவடியில் அனுமதி பெற்றுவிட்டவரை அடுத்து வரவேற்பது சுதந்திரதேவி சிலைதான். என்னையும் வரவேற்றது. எல்லிஸ் தீவு மியூசியத்தில் மணிக்கணக்கில் அறிந்த சரித்திர உண்மைகளுக்குப் பின்னர் சுதந்திர தேவியின் சிலையைப் பார்க்கும்போது அதற்கு ஒரு புது அர்த்தமே கிடைத்தது.

எப்படி எண்ணற்ற மக்கள் பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து அமெரிக்காவை வளப்படுத்தியிருக்கிறார்களோ அதே போல இந்த பிரம்மாண்டமான சிலையும் எண்ணற்ற நாட்டு மக்களின் நன்கொடைகளால்தான் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.  

பிரான்சில் உருவாக்கப்பட்டு அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலையின் கதையைப் பார்க்கும் முன்னால் எல்லிஸ் மியூசியத்தில் இருக்கும் ஒரே ஒரு சிலையைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.   

எல்லிஸ் தீவில் வந்து இறங்கியதும் விசாரிக்கப்பட்டு முதலில் அனுமதிக்கப்பட்ட நபருக்குத்தான் அந்தச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு 15 வயது சிறுமி.

அயர்லாந்திலிருந்து எஸ்.எஸ். நெவாடா கப்பலில் அமெரிக்காவுக்கு 1892 ஜனவரி முதல் நாள் வந்து சேர்ந்த சிறுமி ஆனி மூருக்கு, குடியேற்ற அதிகாரி பத்து டாலர் தங்கக் காசைப் பரிசாக அளித்திருக்கிறார்.  ஆனியுடன் அவள் சகோதரர்களும் வந்தார்கள். பெற்றோர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுக்கு வந்துவிட்டார்கள்.  

ஆனிக்கு எல்லிஸ் மியூசியத்தில் மட்டுமல்ல, அவள் தாய்நாடான அயர்லாந்திலும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.  அமெரிக்காவில் ஐரிஷ்காரர்கள் பெருகுவதற்கு ஆனியும் தன்னாலியன்றதைச் செய்திருக்கிறாள். 49 வயதில் இறந்த அவளுக்கு மொத்தம் 11 குழந்தைகள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.