எனக்கு இரவில் ஆழ்ந்த உறக்கம் வருவதில்லை. மறுநாள் காலை தலைவலி, சோம்பல், அலுவலகத்தில் அதிக கொட்டாவி, சோர்வு என்றெல்லாம் ஏற்படுகிறது. இரவு படுக்கும் முன் நான் என்ன செய்தால் நல்ல உறக்கம் வரும்? தலையை எந்தப் பக்கம் வைத்தால் நல்லது?
வ.சுமதி,
சிதம்பரம்.
இரவு படுக்கையில் சம்மணம் கூட்டி நேராக உட்கார்ந்து கொண்டு 16 முதல் 24 தடவை வரை நீண்ட ஆழ்ந்த மூச்சு இழுத்து மெல்ல விடுவது நல்லது. ஒரே சீரான சுவாஸ ஓட்டம் அயர்ந்த அமைதியான தூக்கத்தை ஏற்படுத்தும். கெட்ட கனவுகள் ஏதும் ஏற்படாமலிருக்கவும் குறட்டை ஒலி எழுப்பாதிருக்கவும் இது நல்லது.
படுக்கையில் மல்லாந்து படுத்து எட்டு தடவை ஒரேசீராக நன்கு நீண்ட நேரம் மூச்சிழுத்து விடுவது நல்லது. மூச்சை உள்ளிழுக்க, 824 வரை எண்ணுவதையும், மூச்சு விடும் நேரம் 1236 வரை எண்ணுவதையும் வழக்கமாக்கிக் கொண்டால் போதுமானது.
முதலில் சில நாள்களுக்கு சிறிய அளவில் எண்ணத் தொடங்கி, பின்னர் சிறிது சிறிதாக அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதன்பிறகு வலது புறமாக ஒருக்களித்துப் படுத்து 16 தடவையும் தொடர்ந்து இடது புறமாகத் திரும்பி 3 தடவையும் ஆழ்ந்த மூச்சு இழுத்துவிட்டு அப்படியே அமைதியுடன் தூங்கலாம். மன அமைதியுடன் உடல் சிறிது சிறிதாகத் தளர்ச்சியுற்றுத் தூக்கத்துக்குத் தயாராக இந்தப் பயிற்சிகள் உதவும்.
இடதுபுறத்தில் தொப்புளுக்கு மேல் மார்பு குழிக்குக் கீழ் உள்ள பகுதியில் இரைப்பை எனும் செரிமாண கோசத்தின் முதற்பகுதி உள்ளது. உண்ட உணவு இரவில் செரிக்க, இரைப்பையில் கதகதப்பும் இயக்கத் தூண்டுதலும் அதிகம் தேவை.
இடது புறத்தை அழுத்தி ஒருக்களித்துப் படுப்பது இதற்குப் பெரிதும் உதவுகின்றது. இடதுபுறமாகப் படுப்பதினால் வலது நாசி வழியே மூச்சு எளிதில் உட்சென்று வெளியாகும். இதனால் ஸீர்ய சக்தி மிகுந்து நிற்கும். இவை செரிமானத்துக்கு உதவும்.
தூக்கம் என்பது உடலும் ஆன்மாவும் ஒன்று சேர்ந்திருக்கும் சுகமான நிலை. அப்போது உடல் உறுப்புகள் அனைத்தும் ஜீவசக்தியைப் பெறுகின்றன. நன்றாகத் தூங்கி எழுந்தவுடன் நமது உடல் சுறுசுறுப்படைகின்றது. இந்த இயற்கையான அனுகூலங்களை நாம் முழுவதுமாகப் பெற வேண்டுமானால் கிழக்கிலோ அல்லது தெற்கிலோ தலையை வைத்து உறங்க வேண்டும்.
கர்க்கர் எனும் முனிவர், 'சொந்த வீட்டில் கிழக்கு திக்கிலும், தீர்க்காயுளை விரும்பினால் தெற்கிலும், பிறர் வீட்டில் மேற்கிலும் தலை வைத்துத் தூங்க வேண்டும். ஒரு காலத்திலும் வடக்கு நோக்கித் தலை வைத்து உறங்காதே!' என்கிறார்.
'கிழக்கில் தலையை வைத்துகொண்டு படுத்தால் புத்தி விசாலமடைகிறது. தெற்கில் சக்தியும் தீர்க்காயுளும் ஏற்படுகின்றன. வடக்கில் தலைவைத்து உறங்கினால் பிணியும் அகால மரணமும் உண்டாகின்றன' என்று மார்க்கண்டேய புராணத்திலும், விஷ்ணு புராணத்திலும் காணப்படுகின்றன.
'வித்வான்கள் மேற்கிலும், வடக்கிலும் தலையை வைத்து உறங்கக் கூடாது' என்று மகாபாரதக் குறிப்பு ஒன்று. வருஷாத்தி நூல், 'கிழக்கில் தலைவைப்பது உத்தமம். தெற்கே வைத்தால் ஆயுள் அதிகரிக்கும். வடக்கேயும் மேற்கேயும் தலையை வைத்து உறங்குவது அழிவைத் தரும்' என்கிறது.
கசகசா, அதிரசம், எருமைப்பால், ஜாதிக்காய், அதிமதுரம், பாதாம் பருப்பு, கிவி பழம், வாதுமைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, அவகோடா, பூசணி விதை, தண்ணீர் போன்றவை ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்துபவை.
கல்யாண கிருதம், மானஸமித்ரம் குளிகை, அமுக்கராக்கிழங்கு, நீர்பிரம்மி, தகரவிதை, ஜடாமாஞ்சி, பிரம்மீதிராக்ஷôதி கஷாயம், சந்தனாதி தைலம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் உறக்கத்துக்கு வலுவூட்டுபவை.
(தொடரும்)