மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

எதிலும் முழு கவனம்!

பொதுவாகவே, தங்கள் பிள்ளைகள் படிப்பிற்காக அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதைத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News image
Updated On :5 ஏப்ரல் 2022, 12:30 am

வி.குமாரமுருகன்

பொதுவாகவே, தங்கள் பிள்ளைகள் படிப்பிற்காக அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதைத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படிப் படித்தால் தான் மிகச் சிறப்பாக பிரகாசிக்க முடியும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல என்று பல ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. மிகவும்  வெற்றியடைந்த மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இத்தகைய முடிவுகள் வெளிவந்துள்ளன. அவர்கள் படிப்பதற்காக மிக அதிக நேரம் செலவிடவில்லை என்பதும், ஆனால் படிக்கின்ற நேரத்தை மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

படிப்பதற்கு குறைவான நேரமே செலவழித்தாலும் கூட உண்மையான தீவிரத்துடன் படிப்பவர்களால் மிக எளிதாகப் படித்து முடிக்க முடிகிறது என்பது தான் உண்மை. 

இன்றைய உலகம் சமூக  ஊடகங்களின் தாக்கத்தாலும், டிஜிட்டல் தாக்கத்தாலும் நிறைந்து கிடக்கும் உலகமாக மாறிவிட்டது. தற்போது மல்ட்டிடாஸ்கிங் என்ற வார்த்தையைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. ஒரே சமயத்தில் பாடலைக் கேட்டுக் கொண்டே எழுதுவது அல்லது கைபேசியை பார்த்துக் கொண்டே உரையாடுவது , கைபேசியில் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்குவது என்பன போன்ற செயல்கள் மலிந்து விட்டன. 

இப்படி ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்பவர்கள் மிகச் சிறந்த வெற்றியை எட்ட முடியவில்லை என்கின்றன ஆய்வுகள். ஏனென்றால் அவர்களின் கவனம் பல விஷயங்களில் சிதறிக் கிடப்பதால் ஒரு விஷயத்தை நோக்கி அவர்களால் ஒருங்கிணைய முடிவதில்லை என்கின்றன ஆய்வுகள். 

மாணவர் ஒருவர் ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுதே,  கைபேசியில் உள்ள குறுஞ்செய்தியை வாசிக்க முற்படுகிறார். தொடர்ந்து யூ டியூபில் வந்துள்ள வீடியோக்களை மேலும் கீழுமாக இழுத்துப் பார்க்கிறார். இப்படியாக அவர் பல மணி நேரம் அந்த புத்தகத்தைப் படிக்கிறார். அதே சமயம் மற்றொரு மாணவர் வேறு எந்தப் பணியிலும் கவனம் செலுத்தாமல் மிகக் குறைவான நேரம் மட்டுமே அந்த புத்தகத்தை வாசிக்கிறார். இப்பொழுது இருவரையும் ஒப்பிடும்போது பல மணி நேரம் புத்தகத்தை படித்த ஒருவரால் சிறப்பாக படிக்க முடியவில்லை என்பதும் குறைவான நேரம் செலவழித்த மாணவரால் சிறப்பாக செயல்பட முடிந்தது என்பதும் தெரிய வந்தது.

பயனற்ற கற்றல் நுட்பங்களை பெரும்பாலான மாணவர்கள் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவை நேரத்தை எடுத்துக் கொள்ளுமே தவிர முன்னேற்றத்தை வழங்காது. ஒரு குறிப்பிட்ட பாடத்தை நீண்ட நேரம் தொடர்ந்து படிப்பது, மனப்பாடம் செய்வது, முக்கியமான கருத்துகளை அடிக்கோடிட்டு தொடர்ந்து படிப்பது என்பன போன்ற விஷயங்கள் அந்த நேரத்திற்கு மட்டுமே பயன்தரக் கூடியவை.அல்லது அன்று நடைபெறும் தேர்வுக்கு மட்டுமே அது உகந்ததாக இருக்கும். ஆனால் நீண்டகால நினைவிற்கு இத்தகைய நுட்பங்கள் பயன் தரவில்லை என்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அதேசமயம், ஒரு பொருள் குறித்து படிப்பதற்கு முன்பாக பிரி டெஸ்ட் எழுத வைத்து அதன் பின் படிக்கச் செய்து போஸ்ட் டெஸ்ட் நடத்தும் பொழுது , அந்த படிப்பிற்காக செலவிடப்பட்ட நேரம் குறைவாக இருந்தாலும் கூட அப்பொழுது படித்த விஷயங்கள் நீண்டகாலத்திற்கு நினைவில் தக்க வைக்க முடிவதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மாணவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சிகளை நடத்தும்போது அது சிறப்பான பலனை தந்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தலைப்பு குறித்து குறுகிய கால இடைவெளியில் வெவ்வேறு நாட்களில் பயிற்சி வழங்கி அது தொடர்பான விஷயங்களை வெவ்வேறு நாட்களில் மாணவர்களிடம் கேட்கும்போது அந்த விஷயங்கள் குறித்து தெளிவான நினைவுகள் மாணவர்களிடம் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு தலைப்பைப் படிக்கும் போது முதலில் சிரமமாக இருந்தாலும் கூட,  அது சிறந்த பலனை அளிப்பதால் பெரும்பாலானவர்கள் அதை தொடர்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

அதேபோன்று ஒரு குழுவாக அமர்ந்து படிக்கக் கூடிய சூழல் ஏற்படும் பொழுது ஒரே மாதிரியான கற்றலை செய்வதைவிட ஒவ்வொருவரும் வேறுபட்ட கற்றலில் ஈடுபட்டால் அது மிக பயன் தரக்கூடியதாக இருக்கும். உதாரணமாக ஒருவர் கூட்டல் குறித்து சொல்லும் போது மற்றொருவர் கழித்தலையோ அல்லது பெருக்கலையோ சொல்லும் பொழுது இருவருக்கும் இரண்டு விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அமையும். 

எனவே படிக்கும்போது படிக்கும் பொருள் சார்ந்து தீவிரமாக கவனமாகப் படித்தால்   குறைவான நேரத்திலேயே  நிறைவான தகவல்களை மனதில் பதிய 
வைத்துக் கொள்ள முடியும். 

கவனச்சிதறல் இல்லாமல்  படித்தால் காலம் நம் கையில் தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.