ஏட்டில் படித்ததோடு
இருந்துவிடாதே - நீ
ஏன் படித்தோம் என்பதையும்
மறந்துவிடாதே!
நாட்டின் நெறிதவறி
நடந்துவிடாதே - நம்
நல்லவர்கள் தூற்றும்படி
வளர்ந்துவிடாதே!
மூத்தோர்சொல் வார்த்தைகளை
மீறக்கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது!
மாற்றார் கைப்பொருளை நம்பி
வாழக்கூடாது - தன்
மானமில்லாக் கோழையுடன்
சேரக்கூடாது!
துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிட வேணும்!
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிட வேணும்!
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான் முகட்டைத்
தொட்டிட வேண்டும்!
வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்
பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல்
விளங்கிட வேண்டும்!
பெற்ற தாயின் புகழும், நீ பிறந்த
மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வாழ்ந்திட வேண்டும்!