/

முத்துக் கதை

தேடல் பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர். மூத்தவன் கூர்ங்கண்ணன். கூரிய பார்வையுடையவன். அடுத்தவன் நற்செவியன். எவ்வளவு சிறிய

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:30 pm

ச. மயில்வாகனன்

தேடல்

பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர்.

மூத்தவன் கூர்ங்கண்ணன். கூரிய பார்வையுடையவன். அடுத்தவன் நற்செவியன். எவ்வளவு சிறிய ஒலியையும் கேட்டு அது எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது, யாருடையது என்று கூறிவிடுவான். மூன்றாவது மகன் வல்லவன். புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளுடனும் சண்டையிட்டு வெல்லக் கூடியவன். நான்காவது மகன் மிகவும் சிறுவன்.

ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தந்தை வீட்டுக்குத் திரும்பவில்லை. பிள்ளைகள் அனைவரும் வருத்தப்பட்டனர். ஆனால் ஒருவருக்காவது தந்தையைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. தந்தை வந்துவிடுவார் என்று நம்பிப் பேசாமல் இருந்துவிட்டனர். சில நாட்களில் காட்டு மிருகங்களால், தந்தை அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டனர்.

கடைக்குட்டி மகன் மட்டும் அப்பா எங்கே? என்று கேட்டு அழுது கொண்டிருந்தான். அப்பாவைப் பார்க்க வேண்டுமென்று தனது சகோதரர்களை நச்சரிக்க ஆரம்பித்தான்.

அவனது தொந்தரவைத் தாங்கமுடியாமல் அண்ணன்மார் மூவரும் தந்தையைத் தேடிப் புறப்

பட்டனர்.

காட்டுக்குள் சென்று கொண்டிருந்தனர். கூர்ங்கண்ணன் சில காலடித் தடங்களைப் பார்த்தான். ""இது நமது தந்தையின் காலடித் தடம். இந்த வழியாகத்தான் அப்பா சென்றிருக்க வேண்டும்'' என்றான். மேலே சென்றனர்.

இப்பொழுது அடர்ந்த அந்தக் காட்டுக்குள்ளிருந்த மெல்லியதாக ஒரு குரல் கேட்பதாக நற்செவியன் கூற, இன்னும் முன்னேறிச்

சென்றனர்.

அங்கே புலி ஒன்றுடன் தந்தை சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். உடனே மூன்றாவது மகன் வல்லவன் பாய்ந்து, புலியுடன் சண்டையிட்டு அதைக் கொன்று, தந்தையைக் காப்பாற்றினான்.

அனைவரின் கண்களிலும் ஆனந்தம் பொங்கியது. தந்தையுடன் வீடு திரும்பினர்.

வீட்டுக்கு வந்ததும் கூர்ங்கண்ணன்,""நான் அப்பாவின் காலடித் தடங்களைக் கண்டதால்தான் அவரை மீட்டுக் கொண்டு வந்தோம்'' என்றான்.

நற்செவியன் கூறினான், ""நான் அப்பாவின் குரலைத் துல்லியமாகக் கேட்டதால்தான் அவரைக் காப்பாற்ற முடிந்தது!''

""நான் என் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்தப் புலியுடன் சண்டை செய்யவில்லையென்றால் அப்பாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது!'' என்று தோளைத் தட்டிக் கொண்டு கேட்டான் வல்லவன்.

கடைக்குட்டி மகன் சொன்னான், ""அப்பாவைத் தேடுங்கள், தேடுங்கள் என்று நான் உங்களைத் தொந்தரவு செய்திருக்காவிட்டால் நீங்கள் எப்படி அப்பாவைக் கண்டுபிடித்திருப்பீர்கள்'' என்று.

உண்மையும் அதுதானே! தேடினால்தானே கண்டடைய முடியும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.