துளித்துளியாய்த் துளித்துளியாய்த்
தூறல் போடுதே - மனம்
சின்னஞ்சிறு குழந்தை போலக்
குதித்து ஆடுதே!
பறவையெல்லாம் கூடுதேடிப்
பறந்து ஓடுதே - ஒரு
பறவை, கூட்டில் சிறகுலர்த்திப்
பாட்டுப் பாடுதே!
ஆனைபோல மேகமெல்லாம்
அசைந்து போகுதே - அவை
வானத்திலே மோத, மின்னல்
வெளிச்சம் ஆகுதே!
இலைநுனியில் விழுந்ததுளி
ஏதோ தேடுதே - அது
இலை நுனியை ஊஞ்சலாக்கி
இசைந்து ஆடுதே!
மண்மணக்கப் பெய்தமழை
மனத்தைக் கழுவுதே - சுகம்
கொண்டுவந்து கொட்டி நம்மைக்
கட்டித் தழுவுதே!
மண்ணுலகம் வாழ்வதற்கு
மழையும் உதவுதே - மழை
கொண்டுவந்து சேர்ப்ப தற்குக்
காடும் உதவுதே!
நாட்டுவளம் காப்பதற்கு
நாமும் உதவுவோம் - நம்
காட்டு வளம் குறையாமல்
காத்து மகிழுவோம்!