மரங்களின் வரங்கள்!: கனமில்லாதவன்- தணக்கு மரம்
குழந்தைகளே நலமா, நான் தான் தணக்கு மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் கைரோகார்பஸ் அமெரிக்கனஸ் என்பதாகும்.


குழந்தைகளே நலமா,நான் தான் தணக்கு மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் கைரோகார்பஸ் அமெரிக்கனஸ் என்பதாகும். நான் ஹெர்னான்டேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு ஹெலிக்காப்டர் மரம் என்ற பெயரும் உண்டு. என்னை நீங்கள் புதுக்கோட்டை, காரைக்குடி போன்ற சமவெளிப் பகுதிகளிலும், காவேரி, கொள்ளிடம் கரைகளிலும் பார்க்கலாம். நான் 15 மீட்டர் வரை ஓங்கி வளர்ந்து, மரத்தின் உச்சியில் கிளைகளைப் பரப்பி, நல்ல தழையமைப்புடன் உங்களுக்கு நிழல் தருவேன். நான் இலையுதிர் கால மரம் என்பதால், மண்ணுக்கு தழை உரமும் கொடுப்பேன்.
என் பட்டையைக் கொண்டே நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளலாம். எப்படின்னு கேட்கறீங்களா? என் பட்டைகள் அலுமினிய பெயிண்ட் அடித்தது போன்று வெண்மை நிறத்திலிருக்கும் குழந்தைகளே! என் பட்டையில் பியான்தைன், டி-மாக்னோ குராரைன் எனும் இரு ஆல்கலாய்டுகள் உள்ளன. இவற்றில் குராரைன் என்பது நச்சு தன்மை உடையது. என் இலைகளில் இந்த நச்சு இல்லை.
நான் அதிக கனமில்லாமல், மிருதுவாக இருக்கும் ஒர் அழகு மரமாவேன். அதுமட்டுமல்ல, வீசும் காற்றின் வேகத்தைத் தடுத்து, தூசியினை வடிகட்டி நான் காற்றை தூய்மைப்படுத்துவேன். நான் என் இலைகளை டிசம்பர் - ஜனவரி மாதத்தில் உதிர்ப்பேன். மே மாதத்தில் துளிர்த்திடுவேன். என் இலை பெரியதாக நுனி நீண்டு கூர்மையாக இருக்கும். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் என் கிளைகளின் நுனியில் நீண்ட காம்புகளில் பூ மஞ்சரிகள் உருவாகும். என் பூக்களிலிருந்து தோன்றும் விதைகளில் இறக்கை இருக்கும்.
உங்களுக்கு மஞ்சரி என்றால் என்னவென்று ஏற்கெனவே என் நண்பர்கள் சொல்லியிருப்பாங்களே. மீண்டும் சொல்கிறேன், ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாக காணப்படுதல் மஞ்சரி எனப்படும். ஞாபகம் வந்திடுச்சா ? என் மஞ்சரியில் அதிகமாகக் காணப்படுவது ஆண் பூக்களாகும். இருப்பினும், பெண் பூக்களும் இருக்கும். அவை பச்சை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் இருக்கும். தேனீக்கள் இப்பூக்களை நாடி வருவாங்க. ஆனால், என் பூக்களின் மணம் அவ்வளவு நன்றாக இருக்காது. வருத்தமாயிருக்கு.
இப்போது உங்களுக்கு, "வெள்ளை நிறத்தொரு பூனை, எங்கள் வீட்டில் வளருது கண்டீர், பிள்ளை பெற்ற பூனை, அவை பேருக்கொரு நிறம் ஆகும்..
வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை, எண்ணங்கள் செய்கைகள் யாவும், இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்' என்ற மகாகவி பாரதியாரின் பாடல் நினைவுக்கு வந்திருக்குமே!
ஆமாம், யாரிடமும், நிறத்திலும், இனத்திலும், மதத்திலும், மொழியிலும் வேற்றுமைப் பாராட்டாதீர்கள். பூமி தாயின் மீது வாழும் குழந்தைகள் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் தானே குழந்தைகளா. என் விதைகளிலிருந்து சோப்பு தயாரிக்க எண்ணெய் எடுக்கிறார்கள்.
என்னை வீட்டு முகப்பிலும், பூங்காக்களிலும், சாலை ஓரங்களில் நட்டு வளர்த்தீர்களேயானால் சுற்றுச் சூழலைக் காத்து, அழகுக்கு அழகூட்டுவேன். நான் தோணிகள், படகுகள், கட்டுமரங்கள், துடுப்புகள், நீங்கள் விரும்பும் பொம்மைகள், காய், கனிகளைத் தாங்கும் பெட்டிகள், பென்சில்கள் செய்ய பெரிதும் உதவுவேன். ஏன், என்னை காகிதங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். ஏழை, எளிய மக்கள் அடுப்பெரிக்கவும் பயன்படுவேன்.
குழந்தைகளே, அக்காலத்தில் என் காய்ந்த விதைகளைக் கோர்த்து ஜபமாலை செய்து இறைவனை வழிபடுவார்களாம். என் விதைகளில் இறக்கை இருக்கும் என்பதால், சிறுவர்கள் இறைக்கையுடைய விதைகளை வைத்துக் கொண்டு காற்றிலே பறக்கவிட்டு மகிழ்வார்கள். நன்றி குழந்தைகளே! மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...