/

கருணையின் தூதுவன்

News image
Updated On :7 மார்ச் 2022, 1:35 pm IST

பறந்து வந்து கிளையில் அமர்ந்த சிட்டை ஆரவாரமாக வரவேற்றனர் பிள்ளைகள். சிட்டு தொண்டையை செருமிக் கொண்டு, "அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் "ஓரியன் ஜீன்" என்ற சிறுவன். வயது 11. ஒரு பேச்சுபோட்டியில் கலந்துகொள்ள ஆர்வமாஇருந்தான்.  போட்டியின் தலைப்பு "தேசிய கருணைப் பேச்சு!". இது சிறுவர் - சிறுமியர்கான பேச்சுப் போட்டி. கொடுக்கப்பட்ட நேரம் இரண்டே நிமிடங்கள். போட்டியில் ஏராளமான சிறுவர் கலந்து கொண்டனர். எல்லாம் ஆன்லைனில்தான். 
ஓரியன் பேச்சின் சாராம்சம் இதுதான். வாழ்க்கையில் அன்பையும், கருணையையும் நான் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கு சங்கடம் இருக்கிறதோ அங்கு கவனத்தை மேற்கொள்ள வேண்டும்! 
"வாழ்க்கையின் லட்சியமே கருணையா? ஆச்சரியமா இருக்கே" என்றான் பாலு.
"ஆமாம்... வாழ்க்கையின் குறிக்கோளாகவே கருணை இருத்தல் வேண்டும் என்கிறான் ஓரியன். போட்டியில் வெற்றி! பரிசுத்தொகை 500 டாலர்கள். கரோனா பாதிப்பு உச்சகட்டமாக இருந்த நேரம் ஓரியனின் மனதைக் கரைத்தது. எங்கும் ஊரடங்கு. பலருக்கு வேலையில்லாத சூழ்நிலை.  பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தனர். பலர் தனிமைப்படுத்திக் கொண்டனர்.     சிறுவர்களுக்கான மருத்துவமனையில் எராளமான சிறுவர்கள் இருந்தனர். ஓரியன் முதற்கட்டமாக 600 பொம்மைகளை வாங்கி சிறுவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளுக்கு வழங்கினான். குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சி.  அது அவர்களுக்கு மிகவும் தெம்பையும், உற்சாகத்தையும் தந்தது.

Story image


"வெரிகுட்!" என்றான் ராமு.
"அதுமட்டுமில்லே... அடுத்து உணவின்றித் தவிப்போர் மீது ஓரியனின் கவனம் திரும்பியது. சுமார் 10,010,00 பேருக்கு ஊரடங்கு நேரத்தில் உணவளித்தான் ஓரியன். இந்தச் செயலுக்கு அவனுடைய பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவரும் அவனுக்கு உறுதுணையாக இருந்தனர்".
 "இந்த வயசிலேயா?  பிரமிப்பா இருக்கே!" என்றாள் மாலா.
"எலலோருக்குமே பிரமிப்புதான். ஓரியன் படிப்பிலும் மிகச் சுட்டி! புத்தகங்கள் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். புத்தகங்கள் பல மனிதர்களை, கலாசாரத்தை, வாழ்வின் நெறிகளை அறிய மிகவும் உதவுகிறது என்கிறான். புத்தகங்கள் கிடைக்காத இடமே உண்மையான பாலைவனம் என்கிறான்.
குழந்தைகள் பலருக்குப் புத்தகங்கள் கிடைக்க வழியில்லாமல் இருப்பதை அறிந்தான். இதுவரை சுமார் 5,00,000 புத்தகங்களை விநியோகம் செய்திருக்கிறான். 11 வயதேயான ஓரியன் ஜீனின் சாதனையைக் கண்டு உலகமே வியந்தது. ஓரியன் ஜீனுக்கு டைம்ஸ் பத்திரிகையும், நிக்லோடியான் நிறுவனமும் இந்த ஆண்டின்  "சிறந்த குழந்தை விருதை" அளித்துள்ளன. சேவை செய்யக்கூடிய பத்து குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கொடுக்கப்படும்  "புரூடன்ஷியல் ஸ்பிரிட் ஆஃப் கம்யூனிட்டி அவார்ட்ஸ்" - விருதையும் இவன் பெற்றுள்ளான்.
"இவ்வளவு பொறுப்புகளை இந்த வயதில் சமாளிக்கிறாய். உன்னை உற்சாகப்படுத்திக்கொள்ள நீ என்ன செய்கிறாய்?" என்று ஒருவர் ஓரியனிடம் கேட்டார்.
"எனக்கு நன்றாக ட்ரம்ஸ் வாசிக்கத் தெரியும். மேலும் பியானோவும் வாசிப்பேன். இசை என்னை உற்சாகப்படுத்திவிடும்!" என்கிறான் ஓரியன் ஜீன் மகிழ்ச்சியுடன். அது மட்டுமில்லே... "லீடர்ஷிப்" என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் எழுதிவிட்டான் ஓரியன். 
"வாழ்க ஓரியன்! கருணையின் தூதுவன்!" என்று பிள்ளைகள் குரல் கொடுக்க, "ஓ.கே.  பை பை... மீண்டும் சந்திப்போம்" என்று கூறிவிட்டுப் பறந்து சென்றது சிட்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.