மூன்றாம் பிறைக்கு வயது நாற்பது

கமல்- ஸ்ரீ தேவி நடித்த "மூன்றாம் பிறை' வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அதன் தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன் கூறுகிறார்:
மூன்றாம் பிறைக்கு வயது நாற்பது
Published on
Updated on
1 min read

கமல் - ஸ்ரீ தேவி நடித்த "மூன்றாம் பிறை' வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அதன் தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன் கூறுகிறார்:

""ஆரம்ப காலத்தில் நிறைய படங்கள் பார்ப்பேன். அப்படிப் பார்த்த படங்களில் "16 வயதினிலே', பாரதிராஜாவின் படமும் ஒன்று. நாம் படம் எடுத்தால் இந்த மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் செய்த வேலையை விட்டுவிட்டு மாமனார் ஆர்.எம்.வீரப்பனின் சத்யாமூவிஸ் படத்தயாரிப்புகளை கவனித்துக் கொண்டிருந்தேன். தனியாகப் படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.  சத்யஜோதி கம்பெனியை ஆரம்பித்து எ.எல்.எஸ் நாச்சியப்பன், ஜெயராம் சாருடன் சேர்ந்து "அந்த ஏழு நாட்கள்' படம் எடுத்தோம். நன்றாகப் போனது.

எங்கப்பா வீனஸ் கோவிந்தராஜ் என்பதால் சிறுவயதிலிருந்தே இயக்குநர் மணிரத்னத்தை தெரியும். குடும்ப ரீதியில் பழக்கம் அதிகம்.  மணிரத்னம் அப்போது "பல்லவி அனுபல்லவி' என்ற படத்தினை எடுத்துக் கொண்டிருந்தார். அதன் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. ஒரு நாள் மணிரத்னம் என்னை அழைத்து, பாலுமகேந்திரா சாரிடம் ஒரு ஸ்கிரிப்ட் இருக்கிறது,  நீ படமாக எடுக்கலாம் என்று அதன் கதையை கேட்க சொன்னார். நானும் எனது தந்தையார் வீனஸ் கோவிந்தராஜும் கதையைக் கேட்டோம். 

எங்களுக்கு பிடித்துவிட்டது. தொடர்ந்து கதாநாயகனாக யாரைப் நடிக்க வைப்பது என்று யோசித்த போது பாலுமகேந்திரா கமலை சொன்னார். அவருக்கும் கதைப் பிடித்தது. நடித்துக் கொடுக்க சம்மதித்தார். கதாநாயகியாக யாரைப் போடலாம் என பல நடிகைகளைப் பற்றி பேசினோம். கமல் -ஸ்ரீதேவி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார். அவரிடம் கதை சொன்ன போது ஸ்ரீதேவியும் ஒத்துக்கொண்டார்.

இசை-இளையராஜா. பாடலை கண்ணதாசன் எழுதுவது என்று முடிவு செய்த போது அவர் உடல் நலமில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக இருந்தது. எனது தந்தை கோவிந்தராஜ் கவிஞர் கண்ணதாசனை தொடர்பு கொண்டு பேசினார்.  அவர் மறுநாள் கதையைக் கேட்கிறேன் என்று கதை கேட்டு "கண்ணே கலைமானே' என்ற பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு அமெரிக்கா புறப்பட்டார். 
அந்தப் பாடலே அவர் எழுதிய கடைசிப் பாடலாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.ஒளிப்பதிவு-இசை-பாடல் அதன் கிளைமாக்ஸ் எல்லாமே பிரமாதமாக அமைந்தது. பிப்ரவரி 19-இல் படம் வந்தது. அனைவரையும் கவர்ந்த படமாக அமைந்தது. தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளித் தந்தது. இன்றைக்கு படம் வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் கூட  சிறந்த படமாக அது அமைந்திருக்கிறது என்பது எங்களுக்கும் பெருமை. யூனிட்டுக்கும் பெருமை'' என்கிறார் சத்யஜோதி தியாகராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com