உ.வே.சா. தம் வாழ்நாளிலேயே நற்றிணை, அகநானூறு ஆகிய இரண்டு நூல்களையும் பதிப்பிக்க நினைத்து, ஆராய்ந்து வைத்திருந்த குறிப்புகள் பல. தாம் பதிப்பித்த குறுந்தொகையைப் போல பதவுரை, முடிபு கருத்து, ஒப்புமைப் பகுதிகள் போன்றவற்றுடனும் பதிப்பிக்க எண்ணியிருந்தார். அவர் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்பே அவர் தமிழன்னையோடு இரண்டறக் கலந்துவிட்டார்.
÷நற்றிணைக்கு உ.வே.சா. எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு, அவர் (உ.வே.சா.) நினைத்ததை முடித்து வைத்த பெருமை வித்துவான் எச்.வேங்கடராமனையே சேரும்.
இவர் திருவையாறு அரசர் கல்லூரியில் 36 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றியவர். நன்னூல் கூறும் நல்லாசிரியருக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
÷""பதிப்பில் அவர் மலை போன்றவர்; நானோ மடுவினை ஒத்தவன். ஒரு சிறிதும் தகுதியற்றவன். என்றாலும், அவர் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பேரவாவே என்னை இச்செயலில் இறங்கத் தூண்டிற்று. "ஆசை பற்றி அறையலுற்றேன்' என்று கம்பன் கூறியது போல யானும் "பேர் ஆசை' பற்றியே பதிப்பிக்கலுற்றேன்...'' என்று தமது முகவுரையில் எச்.வேங்கடராமன் கூறியுள்ளார்.
÷நற்றிணைக்கு முதல் உரை கண்டவர் முதுபெரும் புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர். அதன்பின் பொ.வே.சோமசுந்தரனார், ஐயர் உரையை எளிமைப்படுத்திய ஆய்வுரை 1962-இல் வெளிவந்தது. அடுத்து ஒüவை துரைசாமிப்பிள்ளையும், புலியூர் கேசிகனாரும், மர்ரே நிறுவனத்தாரும், மணிமேகலைப் பதிப்பகத்தாரும் நற்றிணையை எளிமைப்படுத்தி வெளியிட்டுள்ளனர். அந்த வரிசையில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் விட்ட பணியைத் தொடர்ந்து முடித்த வித்துவான் எச். வேங்கடராமனைத் தமிழுலகம் மறக்காது - மறக்கவும் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.