தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை ஏய்ப்பார்முன்
சொல்லோ டொருப்படார் சோர்வின்றி மாறுபவே
வில்லோடு காக்கையே போன்று. (பாடல்-193)
தீய செயல்களைச் செய்வதற்குச் சிறிதும் அஞ்சாதவர்களாக, தம்மைக் காத்துப் பேணுபவரைப்போல ஒருவர் சொன்ன பொய்களையும், கோள் பேச்சுக்களையும் நம்பாமல், அப்படித் தம்மை ஏய்ப்பவர்களின் முன்னிலையிலேயே அவர் சொல்லோடு மனம் ஒன்றாதவர்களாகக் கொஞ்சமும் மனத்தளர்ச்சியின்றி, விட்டொழித்து விடுபவரே அறிவுடையவர். அதுவே, நெல்லைத் தின்ன வரும் காகம், காவலர் கையில் இருக்கும் வில்லைப் பார்த்து ஓடிப்போகும் அறிவுள்ள செயல் போன்றதாகும். "வில்லோடு காக்கையே போன்று' என்பது பழமொழி.