அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர். அய்யனார் தனியாகவும், சில இடங்களில் பூரணை, புஷ்கலை என இரு தேவியருடன் சேர்ந்தும் காட்சி தருவது வழக்கம்.
புகழ்பெற்ற அய்யனார் கோயில்களுள் ஒன்று, கடலூர் மாவட்டம், தென்னம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அழகு முத்து அய்யனார் கோயில். அருகிலேயே அழகர் சித்தர் கோயிலும் உள்ளது.
அக்காலத்தில் வனப்பகுதியாக இருந்த இடத்தில் அமைந்திருந்த அய்யனார் கோயிலுக்கு, சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தெய்வகடாட்சம் நிறைந்த பக்தர் ஒருவர் எங்கிருந்தோ வந்தார். பின்னர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.
அழகு முத்து அய்யனாரை வழிபடுபவர்கள் இவரையும் வழிபட்டு நிற்க, பக்தர்களின் குறைகளை நல்ல முறையில் தீர்த்து வந்தார். இந்நிலையில் ஒருநாள், கோயிலின் பின்புறமுள்ள கிணற்றில் இறங்கினார்.
அவர் குளித்துவிட்டு மேலே வருவார் என்று பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால், அவரோ கிணற்றில் இருந்து வெளியே வரவே இல்லை. அதன் பிறகு தான் அவர் ஒரு சித்தர் என்றும், தண்ணீரிலேயே அவர் சமாதியில் அமர்ந்து விட்டார் என்றும் ஊர் மக்களுக்குத் தெரியவந்தது. அதே இடத்தில் அவருக்குத் தனிக்கோயில் எழுப்பப்பட்டது.
அய்யனாரை வழிபடுவோர், அழகர் சித்தரையும் வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு, இங்கு வந்து வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறியவர்கள் அவர்களின் உருவங்களையே வண்ணச் சிலைகளாக காணிக்கையாகச் செலுத்துவதுதான்.
இவ்வாறு காணிக்கை செலுத்திய வண்ண வண்ணச் சிலைகள் லட்சக்கணக்கில் இந்தக் கோயிலைச் சுற்றிலும் வைத்திருப்பது கண்கொள்ளாக் காட்சி.
வீடுவரம் கிடைத்தால் வீடு வடிவத்தில் சிலை, கணினி சம்பந்தப்பட்ட வேலை கிடைத்தால், கணினி சிலை, ராணுவத்தில் வேலை கிடைத்தால் ராணுவ வீரர் சிலை, காவல் துறையில் வேலை கிடைத்தால் காவலர் சிலை, குழந்தை வரம் கிடைத்தால் குழந்தை சிலை என்றும்; இதற்கெல்லாம் மேலாக தங்கள் வீட்டில் வளர்த்து வரும் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு, வேண்டுதலால் குணம் பெற்றால், அவற்றின் வடிவிலும் சிலைகளை காணிக்கையாகச் செலுத்துவது தனிச் சிறப்பு.
அழகர் சித்தர் திங்கள்கிழமையன்று ஜல சமாதி அமர்ந்த நாள் என்பதால், அன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதம் முதல் திங்கள்
கிழமையன்று பெரிய உற்சவம் நடத்தப்படுகிறது. இதில் அண்டை மாநில, மாவட்ட பக்தர்கள் திரளாகக் கலந்துகொள்வர்.
அழகு முத்து அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். வேலை வாய்ப்பு, திருமண வரம், குழந்தைப்பேறு உள்பட எதுவாக இருந்தாலும், இங்கு வந்து நம்பிக்கையோடு வேண்டி வழிபட்டுச் செல்வோரின் கோரிக்கைகள் கூடிய விரைவில் நிறைவேறும் என்பதற்கு இங்கு தொடர்ந்து வந்து செல்லும் பக்தர்களும், இங்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வண்ண வண்ணச் சிலைகளும் சாட்சியாக விளங்குகின்றன.
கோயில் வளாகத்தில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி, நவகிரகம், வள்ளலார் உள்ளிட்ட சந்நிதிகளும் அமைந்துள்ளன.
புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் மற்றும் ஏம்பலம் வழியாகவும், கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும் தென்னம்பாக்கம் வரலாம். தரிசனத்துக்காக காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

உய்யகொண்டான் வாய்க்காலில் வெண்கல சிலை கண்டெடுப்பு

வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை பகுதிகளில் மழை
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


