செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை (ஏ-சாட்) இந்தியா பரிசோதித்ததால் விண்வெளியில் சுற்றி வரும் உடைந்த உதிரி பாகங்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சர்வதேச அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்தியாவின் ஏ-சாட் செயற்கைக்கோள் பரிசோதனை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஏ-சாட் செயற்கைக்கோள் சோதனை காரணமாக ஏற்பட்டுள்ள உதிரி பாக குப்பைகள் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளியில் ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது. எனவே அதே நிலை கொண்டுள்ள இதர நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு அமைதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா கடந்த மாதம் 27-ஆம் தேதி மேற்கொண்டது. அப்போது, பரிசோதனைக்காக இந்திய செயற்கைக்கோள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த மிஷன் சக்தி திட்டம் வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம், இந்த வல்லமையைக் கொண்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.