/

முடிந்தது பிணைக்காலம்: மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப் 

ஊழல் வழக்கில் வழங்கப்பட்டிருந்த பிணைக்காலம் முடிந்ததை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார்.

News image
Updated On :7 மே 2019, 10:56 am

IANS

லாகூர்: ஊழல் வழக்கில் வழங்கப்பட்டிருந்த பிணைக்காலம் முடிந்ததை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது. 2017-ஆம் ஆண்டு வெளியான 'பனாமா ஆவணங்கள்' விவகாரம் தொடர்பாக, ஊழல் மற்றும் முறைகேடாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கொன்றில், அவருக்கு 2018-ஆம் ஆண்டு இறுதியில் ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.   

அதையடுத்து 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் அவர் லாகூரின் கோட் லஹ்பாட்  சிறையிலிருந்து வருகிறார்.

அப்போது கடந்த மார்ச் 26-ஆம் தேதி உடல் நலக் குறைபாட்டைக் காரணம் காட்டி நவாஸ் ஷெரீப் ஆறு வார காலம் பிணை கேட்டிருந்தார். அதன்படி விடுவிக்கப்பட்டவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது பிணைக்காலத்தினை மேலும் நீட்டிக்க கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவினை நீதிமன்றம் நிராகரித் து விட்டது.    

இந்நிலையில் பிணைக்காலம் முடிந்ததை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார்.

தற்போது இஸ்லாமியர்களின் புனித காலமான ரம்ஜான் நோன்புக் காலம் நடைபெற்று வருவதால், நோன்புத் திறப்பு நிகழ்வு முடிந்த பின்னர் அவர் சிறைக்குத் திரும்புவார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முன்னதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகமானது நவாஸ் ஷெரீப் செவ்வாய் மாலை 5 மணிக்கு சிறைக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.