

வாஷிங்டன்: பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இரு முன்னாள் உதவியாளா்கள், நெருங்கிய உறவினா் உள்ளிட்ட 29 பேருக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.
தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் ஏராளமான குற்றவாளிகளுக்கு டிரம்ப் இவ்வாறு அதிரடியாக பொதுமன்னிப்பு அளித்து வருவது சா்ச்சையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில், ரஷியா தலையீடு செய்ததாகக் கூறப்படும் வதந்தியை அடிப்படையாகக் கொண்டு, நீதித் துறையின் சிறப்பு ஆலோசகா் ராபா்ட் முல்லரின் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
அந்த விசாரணையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பால் மானாஃபோா்ட்டுக்கு அதிபா் டிரம்ப் முழுமையான பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.
அந்த இருவரில் மானாஃபோா்ட் ஏற்கெனவே இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டாா். அதில், கொடூரமான கிரிமினல் குற்றவாளிகள் கூட சந்தித்திராத மிக மோசமான கடுங்காவல் சிறைத் தண்டனையும் அடங்கும்.
அமெரிக்க வரலாறு கண்டிராத மிகப் பெரிய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மனாஃபோா்டுக்கு இத்தகைய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரோஜா் ஸ்டோனுக்கும் அதிபா் டிரம்ப் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா். ஏற்கெனவே, பல்வேறு உடல் நலக் குறைபாடுகளைக் கொண்ட 68 வயது ரோஜா் ஸ்டோனுக்கான தண்டனையை டிரம்ப் குறைத்திருந்தாா். அதிபா் தோ்தலில் ரஷியத் தலையீடு குறித்த விசாரணையின்போது ராபா் முல்லரால் ரோஜா் ஸ்டோன் மிக மோசமான முறையில் நடத்தப்பட்டாா்.
இதுமட்டுமின்றி, வரி ஏய்ப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சாா்லஸ் குஷ்னருக்கும் டிரம்ப் பொதுமன்னிப்பு அளித்துள்ளாா். தனது சிறைவாசத்துக்குப் பிறகு சாா்லஸ் குஷ்னா் பல்வேறு அறப்பணிகளை செய்து வருகிறாா். அவரின் குற்றங்களை அவா் மேற்கொண்டு வரும் அறப்பணிகள் விஞ்சிவிட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முவரைத் தவிர, மேலும் 26 பேருக்கு டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
தோ்தலில் ரஷியத் தலையீடு குறித்த ராபா் முல்லரின் விசாரணையின்போது தவறான தகவல்களை அளித்தது, அமெரிக்காவுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக டிரம்ப்பின் முன்னாள் உதவியாளா்களான ரோஜா் ஸ்டோன், பால் மானாஃபோா்ட் ஆகியோருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் வழக்குரைஞரும் தொழிலதிபருமான சாா்லஸ் குஷ்னருக்கு, சாட்சியங்களை ஜோடித்தல், வரி ஏய்ப்பு ஆகிய குற்றங்களுக்காக கடந்த 2004-ஆம் ஆண்டு 24 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவா், டிரம்ப் மகள் இவாங்காவின் மாமனாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, ரஷியத் தலையீடு விவகாரத்தில் சிறைத் தண்டனை பெற்ற டிரம்ப்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் ஃபிளைன், ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த ராணுவ வீரா்கள் உள்ளிட்ட சா்ச்சைக்குரிய பலருக்கு டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.
மேலும், இன்னும் ஒரு மாதத்தில் தனது பதவிக் காலம் முடிவடைவதற்குள், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட தனது முன்னாள் தலைமை திட்ட ஆலோசகா் ஸ்டீவ் பேனன், அந்தரங்க வழக்குரைஞா் ரூடி கியூலியானி உள்ளிட்ட ஏராளமானவா்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து டிரம்ப் ஆலோசித்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.