இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகளைக் காணவில்லை என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகளை இன்று காலை முதல் காணவில்லை என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பணி நிமித்தமாக, தூதரக அலுவலகத்தில் இருந்து இருவரும் ஒரு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் உரிய இடத்தைச் சென்றடையவில்லை. அவர்கள் சுமார் இரண்டு மணி நேரமாகக் காணவில்லை என்று இன்று காலை தகவல்கள் தெரிவித்திருந்தன.
இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அதிகாரிகளிடம், இந்திய தூதரக அதிகாரிகள் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த இரண்டு அதிகாரிகள், உளவு பார்த்ததாகக் கூறி இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு, பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, இந்திய தூதரக அதிகாரியை அழைத்து தங்களது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தது.