பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு அந்நாட்டில் உள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆப்கனில் இருந்து தப்பிப்பதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்ததைத் தொடர்ந்து விமான நிலையம் பராமரிக்கப்படாமல் சேதத்திற்குள்ளாகியது.
இதையும் படிக்க | ஆப்கனில் பெண் கல்வி மறுக்கப்பட வாய்ப்பு: யுனெஸ்கோ கவலை
மேலும் தலிபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவையைத் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்க உள்ள இந்த விமான சேவைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்து விட்டதாக பாகிஸ்தான் பன்னாட்டு விமானநிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஹபீஸ் கான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | முன்னாள் துணை அதிபரின் சகோதரரை கொன்ற தலிபான்கள்
முன்னதாக காபூல் விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் தலிபான்களுக்கு கத்தார் உதவி வருவதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.