உக்ரைனில் நடந்து வரும் போரில் பங்கேற்க மக்களுக்கு உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷியாவின் தாக்குதலில் இதுவரை நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஆயுதம் ஏந்த தயாராக இருக்கும் அனைத்து மக்களும் ராணுவ படையில் சேரலாம் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.