போர் நிறுத்துவது தொடர்பாக ரஷியாவிடம் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
மேலும், ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா போரை நிறுத்துவது தொடர்பாக ரஷியாவிடம் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், வரலாற்றில் பலமுறை இந்தியா அமைதியைத் தேடி தந்துள்ளது. தற்போது ரஷிய அதிபர் புதின் யாருடைய பேச்சைக் கேட்பார் எனத் தெரியவில்லை, அதனால் உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான பிரதமர் மோடி போரை நிறுத்துவது குறித்து புதினிடம் பேச வேண்டும் என உக்ரைன் தூதர் கோரிக்கை வைத்துள்ளார்.