உக்ரைன் - ரஷியப் போர் உக்கிரமடைந்து வருகிற நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகள் வழியாக மீட்க இந்தியத் தூதரகம் முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீதான போரை நேற்று ரஷியா தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதால் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக இந்தியர்களை மீட்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் உக்ரைனிலுள்ள இந்தியர்கள் போதுமான பணம் மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு ஹங்கேரியின் ஷோப்-சகோனி(chop-zahony) எல்லைப் பகுதிக்கும், ருமேனியாவின் பொருப்னே-சிரெட்(porubne-siret) எல்லைப் பகுதிகளுக்கு வாகனம் மூலம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.