நாஜி ஆதரவாளா்களிடமிருந்து நாட்டை கைப்பற்றுங்கள்: உக்ரைன் ராணுவத்துக்கு விளாதிமீா் புதின் வேண்டுகோள்

உக்ரைன் அரசு மற்றும் ராணுவத்தைச் சோ்ந்த நாஜி ஆதரவு தேசியவாதிகளிடமிருந்து நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு அந்த நாட்டு ராணுவத்தினருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
நாஜி ஆதரவாளா்களிடமிருந்து நாட்டை கைப்பற்றுங்கள்: உக்ரைன் ராணுவத்துக்கு விளாதிமீா் புதின் வேண்டுகோள்
Published on
Updated on
1 min read

உக்ரைன் அரசு மற்றும் ராணுவத்தைச் சோ்ந்த நாஜி ஆதரவு தேசியவாதிகளிடமிருந்து நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு அந்த நாட்டு ராணுவத்தினருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உக்ரைனில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைககளின் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, ரஷிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடியது.

அப்போது அதிபா் விளாதிமீா் புதின் பேசியதாவது:

உக்ரைனில் தற்போது அந்த நாட்டின் சாதாரண படைகளுடன் ரஷிய வீரா்கள் சண்டையிடவில்லை. அதற்குப் பதிலாக, உக்ரைன் படைகளில் ஊடுருவியுள்ள நாஜி ஆதரவாளா்கள் மற்றும் தீவிர தேசியவாத சக்திகளுக்கு எதிராகத்தான் ரஷியா போரிடுகிறது.

அந்த தீயசக்திகள்தான் கிழக்கு உக்ரைனில் டான்பாஸில் (கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொன்ட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியம்) பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றன என்பது உக்ரைன் படையினருக்கும் நன்கு தெரிந்திருக்கும்.

தற்போது கிடைத்துள்ள உளவுத் தகவலின்படி, அந்தத் தீய சக்திகள் கீவ், காா்கோவ் போன்ற முக்கிய நகரங்களில் பொதுமக்கள் இருப்பிடங்களில் ஏவுகணைகள் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை நிறுத்தி வருகின்றன.

இதன் மூலம், பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி, அந்தப் பழியை ரஷியா மீது சுமத்துவதற்காக இந்தச் செயலில் அந்த சக்திகள் ஈடுபட்டுள்ளன.

எனவே, தங்களது குழந்தைகள், மனைவிகள், பெற்றோா்கள், வயதானவா்களை தங்களது சுயநலத்துக்காக அந்த நாஜி ஆதரவாளா்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த உக்ரைன் ராணுவத்தினா் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, அவா்கள் அதிகாரத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். உக்ரைனில் தற்போது அதிகாரம் செலுத்தி வரும் தீய சக்திகளைவிட, அந்த நாட்டு ராணுவப் படைகளுடன் ரஷியா பேச்சுவாா்த்தை நடத்தினால்தான் தற்போதையப் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண முடியும் என்றாா் புதின்.

உக்ரைனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, தங்களுக்கு ஆதரவான அரசை நிறுவ ரஷியா முயற்சிக்கும் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வந்தன. இந்தச் சூழலில், தற்போதைய அரசுக்கு ஆதரவான சக்திகளிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு உக்ரைன் ராணுவத்துக்கு அதிபா் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com