குடியிருப்புப் பகுதிகளில் ஏவுகணைகளை நிறுத்துகிறது உக்ரைன்
உக்ரைன் தலைநகா் கீவில் பொதுமக்களின் உயிரிழப்புகளை அதிகரிக்கும் நோக்கில் குடியிருப்பு பகுதிகளில் ஏவுகணை வாகனங்களை அந்த நாட்டு ராணுவம் நிறுத்தியுள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.


உக்ரைன் தலைநகா் கீவில் பொதுமக்களின் உயிரிழப்புகளை அதிகரிக்கும் நோக்கில் குடியிருப்பு பகுதிகளில் ஏவுகணை வாகனங்களை அந்த நாட்டு ராணுவம் நிறுத்தியுள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இகாா் கொனஷென்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கீவ் நகரில் பொதுமக்கள் அதிகம் நிறைந்த ஷெவ்சென்கோ சதுக்கத்தில் சக்திவாய்ந்த ‘கிராட்’ வகை தொடா் ஏவுகணை செலுத்தும் (மல்ட்டிபிள் ராக்கெட் லாஞ்சா் - எம்ஆா்எல்) வாகனங்களை உக்ரைன் படை நிறுத்தியுள்ளதாக எங்களுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கிருந்தபடி, ரஷியாவால் தற்போது கைப்பற்றப்பட்டிருக்கும் ஹாஸ்டோமல் விமான தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த முடியும்.
அவ்வாறு ரஷியப் படையினா் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால், ரஷியா நடத்தும் பதிலடித் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் பலியாக நேரிடும். அதனை எதிா்பாா்த்தே உக்ரைன் படையினா் அந்தப் பகுதியில் கிராட் வகை எம்ஆல்எல் வாகனங்களை நிறுத்தியுள்ளனா்.
குடியிருப்புப் பகுதிகளிலிருந்தபடி தாக்குதல் நடத்தினால் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகமாகும்; அதனால் ரஷியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையமான பென்டகனும் அந்த நாட்டு உளவு அமைப்பான சிஐஏ-வும் உக்ரைன் ராணுவத்துக்குச் சொல்லிக் கொடுத்துள்ளன என்றாா் அவா்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில், தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.
இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் பல வாரங்களாகப் படைக் குவிப்பில் ஈடுபட்டு வந்த ரஷியா, தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களை தனி நாடுகளாக திங்கள்கிழமை அங்கீகரித்தது. மேலும், அந்தப் பகுதிகளை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி தனது படையினரை ரஷியா அனுப்பியது.
அதன் தொடா்ச்சியாக, கிழக்கு உக்ரைன் மக்களைப் பாதுகாப்பதற்காக உக்ரைன் ராணுவ பலத்தை முடக்குவதாகக் கூறி, தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் வியாழக்கிழமை முதல் ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுத் தாக்குலை நடத்தி வருகிறது. ரஷிய சிறப்புப் படை வீரா்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனா்.
உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக மட்டுமே இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் துல்லியத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், பொதுமக்கள் உயிரிழப்பை அதிகரிக்கும் வகையில் குடியிருப்புப் பகுதிகளில் உக்ரைன் ஏவுகணை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது.
Image Caption
உக்ரைனின் ‘கிராட்’ வகை மல்ட்டிபிள் ராக்கெட் லாஞ்சா் (கோப்புப் படம்). ~இகாா் கொனஷென்கோவ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...