நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். எந்த இஸ்லாமிய பெண்ணும் தனது கணவர் மூன்று மனைவிகளுடம் இருப்பதை விரும்பமாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தரகண்ட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் மாநில அரசு வரைவை தயார் செய்யவுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியிருந்தார்.
கடந்த மார்ச் 24ஆம் தேதி இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்று கொண்ட தாமி, "இந்த வரைவுக்கு (மாநில) அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. மற்ற மாநிலங்களும் எங்களை பின்பற்றும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இதற்கு மத்தியில், தில்லிக்கு சென்ற அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த, தாமியை சந்தித்து பேசினார். பின்னர் பேசிய ஹிமாந்த சர்மா, தான் சந்தித்த இஸ்லாமியர்கள் அனைவரும் பொது சிவில் சட்டத்தை விரும்புவதாக கூறினார்.
இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "எந்த இஸ்லாமிய பெண்ணும் தன் கணவனுக்கு மூன்று மனைவிகள் இருப்பதை விரும்புவதில்லை. யாருமே விரும்பமாட்டார்கள். எந்த முஸ்லீம் பெண்ணையும் கேட்கலாம்.
அவரின் கணவன் மூன்று பெண்களை மணக்க வேண்டும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். யார் அதை விரும்புவார்கள். இஸ்லாமிய ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வது அவருடைய பிரச்சனையல்ல, மாறாக இஸ்லாமிய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பிரச்னை.
முத்தலாக் சட்டத்திற்கு பிறகு இஸ்லாமிய பெண்களும் தாய்மார்களும் கெளரவத்துடம் இருக்க வேண்டுமானால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். நான் ஒரு இந்து, எனக்கு பொது சிவில் சட்டம் உள்ளது. என் சகோதரி மற்றும் மகளுக்கு, பொது சிவில் சட்டம் உள்ளது. என் மகளுக்கு பொது சிவில் சட்டம் இருந்தால், இஸ்லாமிய மகள்களுக்கு அந்த பாதுகாப்பு இருக்க வேண்டும்" என்றார்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா இதுகுறித்து கூறுகையில், "பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாநில அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. ஒரே நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது காலத்தின் தேவை.
ஒரு நபருக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு மற்றொரு சட்டம் என்ற அமைப்பிலிருந்து நாம் வெளியேற வேண்டும். நாங்கள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம்" என்றார்.
இதே கருத்தைதான் இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூரும் பிரதிபலித்திருந்தார்