பேரிடர்களைத் தடுப்பதற்கான செலவினங்களை உலக நாடுகள் குறைவாகவே மேற்கொள்வதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. புதிய ஆற்றல்மூலங்களை நோக்கி நகரும் அதேவேளையில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் பேரிடர் தடுப்புக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலும் செலவிடப்படுவதில்லை என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | கோத்தபயவை பதவி விலகக் கோரும் போராட்டம் 50வது நாளை எட்டியது
உலகம் முழுவதும் 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பேரிடர் நிதியாக ஒதுக்கப்பட்ட 133 பில்லியன் டாலர்களில் 4 சதவிகிதம் மட்டுமே பேரிடர் முன்னெச்சரிக்கைக்காக செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எஞ்சிய தொகை பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு செலவாகியுள்ளது என ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய நாடு அவையின் பேரிடர் தடுப்பு அமைப்பின் தலைவர் மாமி மிசுடோரி, "உலகளாவிய கூட்டு விளைவுகளுடன் கூடிய பல பேரிடர்களின் மத்தியில் வாழ்ந்துவரும் நாம் அவற்றை தடுப்பதில் அதிக முதலீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கரோனா, எபோலா உள்ளிட்ட தொற்றுநோயிலிருந்து மீண்டுவரும் நிலையில் உலகம் எதிர்வரும் காலத்தில் இயற்கை பேரழிவுகளின் மத்தியில் போராட வேண்டியிருக்கும் என ஐநா எச்சரித்துள்ளது.
வளரும் நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதத்தை பேரிடர் மீட்புக்காக செலவழிக்கின்றன. இவையே வளர்ந்த நாடுகளில் வெறும் 0.1 சதவிகிதம் முதல் 0.3 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.