தென்னாப்பிரிக்காவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டது. இந்த கடுமையான மழைபொழிவால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா சந்தித்துவரும் கடுமையான இயற்கை பேரிடர்களுக்கு காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் வழக்கமான பாதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள விஞ்ஞானிகள் இதுவரை 453 பேர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க வெள்ளபாதிப்பு தொடர்பாக பேசிய அந்நாட்டின் அதிபர் சிரில் ரமபோசா இதுவரை கண்டிராத பேரழிவு எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் காலமானார்
காலநிலை மாற்றத்தால் வளிமண்டலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையானது அதிகளவு தண்ணீரை தேக்கிவைத்து கூடுதல் மழைப்பொழிவுக்கு வழிவகுப்பதாகத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் கடந்த காலத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பெய்யும் மழைப்பொழிவை ஒப்பிடும்போது, தற்போது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற தீவிர மழை பெய்வதாகத் தெரிவித்துள்ளனர்.